/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்லாரியில் இருந்து இரும்பு தாது கடத்தினார் சிவா
/
பல்லாரியில் இருந்து இரும்பு தாது கடத்தினார் சிவா
ADDED : ஏப் 06, 2025 08:23 AM

பெங்களூரு : “பல்லாரியில் இருந்து இரும்பு தாது கடத்தினார்,” என, துணை முதல்வர் சிவகுமார் மீது, மத்திய கனரக அமைச்சர் குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ராம்நகர் கேத்தகானஹள்ளியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தாக சித்தராமையாவும், சிவகுமாரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அவர்கள் செய்த மோசடிகளை, ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துவேன். அரசுக்கு எதிராக இன்று முதல், என் போர் ஆரம்பம் ஆகிறது.
அடிக்கடி கடிதம்
கனகபுராவில் போதுமான பாறை உள்ளது. நான் ஏன் பல்லாரிக்கு செல்ல வேண்டும் என்று, சிவகுமார் கேட்டுள்ளார். அவருக்கும், பல்லாரிக்கும் எந்த தொடர்பும் இல்லையா? அப்படி என்றால் கனிம வள அதிகாரிகளுக்கு அவர் அடிக்கடி கடிதம் எழுதுவது ஏன்?
சிவகுமார் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, பல்லாரியில் இருந்து மணல் என்ற பெயரில் இரும்பு தாது கடத்தினார். இரும்பு தாது விற்க ஏழு நிறுவனம் நடத்தினார்.
எத்தனை டன் இரும்பு தாது கடத்தினார் என்ற தகவல் என்னிடம் உள்ளது.
நான் பி.எஸ்.சி., படிக்கும்போது குப்பையை சேகரிக்க டெண்டர் எடுத்தேன். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
என் தந்தை கூறியதால் டெண்டரை திரும்ப கொடுத்தேன்.
மாநகராட்சியில் குப்பை சேகரிக்க தனியாருக்கு 30 ஆண்டு ஒப்பந்தம் கொடுக்க போகின்றனர்.
ஒவ்வொரு டன் குப்பையை அகற்ற 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் 15,000 கோடி கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினர்.
இதுபற்றி நான் கேள்வி எழுப்பியதால் 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பழிவாங்கும் அரசியல் செய்கிறது.
தொந்தரவு
இந்த நாட்டில் முதன்முறையாக நில ஆக்கிரமிப்பு பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது இங்கு தான்.
என் நிலத்திற்கு அடுத்த நிலத்தின் உரிமையாளர்களுக்கும் தொந்தரவு கொடுக்கப்படுகிறது.
சாய் வெங்கடேஸ்வரா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது பற்றி, 17 ஆண்டுகளாக என்னிடம் விசாரணை நடக்கிறது. ஆனால் 'முடா' வழக்கில் மட்டும் எப்படி சீக்கிரம் 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர்? இது என்ன மாதிரியான விசாரணை?
அரசு ஒப்பந்த பணிகளில் தலித்துக்களுக்கு எத்தனை சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது என்ற ஆவணத்தை வெளியிட வேண்டும். கே.எம்.எப்., நிறுவனத்தை நஷ்டத்தில் தள்ளி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

