குப்பை மாபியாவின் 'ஏஜன்ட்' அசோக்கை சாடிய சிவகுமார்
குப்பை மாபியாவின் 'ஏஜன்ட்' அசோக்கை சாடிய சிவகுமார்
ADDED : ஜூன் 11, 2026 12:09 AM

- நமது நிருபர் -: குப்பை மாபியாவின் ஏஜன்ட், செய்தி தொடர்பாளர் என, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை, முதல்வர் சிவகுமார் சாடியுள்ளார்.
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தலைமையில் நாளை (இன்று) நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். இன்று (நேற்று) மத்திய நகர்ப்புற விவகார துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து, பெங்களூரில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசியுள்ளேன்.
கர்நாடகாவிற்கு மத்திய அரசு பாக்கி வைத்துள்ள திட்டங்கள் குறித்து, கர்நாடக பவன் அதிகாரிகளிடம் தகவல் பெற்றுள்ளேன். இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற திறமையான அதிகாரிகள் கருத்துகளையும் கேட்க உள்ளேன்.
பெங்களூரில் குப்பை டெண்டரில் 36,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக, கவர்னரிடம், எதிர்க்கட்சி தலைவர் அசோக் புகார் செய்துள்ளார். நான் முதல்வர் ஆனதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் ஆட்சியில் இருந்த போது ஏன் டெண்டருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
குப்பை நிர்வகிப்பு எப்படி நடக்கிறது என்று ஹைதராபாத், சென்னையில் நேரில் சென்று பார்த்து உள்ளேன். பெங்களூரில் சேரும் குப்பைகளை கொட்ட இடம் தேடுகிறோம்.
குப்பை அகற்றும் விவகாரத்தில் மாபியா கை உள்ளது.
அந்த மாபியாவின் ஏஜென்ட், செய்தி தொடர்பாளராக அசோக் மாறியுள்ளார். நாங்கள் வெளிப்படையாக ஆட்சி செய்வதை, அவர்களால் ஏற்க முடியவில்லை. கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் இறந்தவர்கள் பெயரிலும் சிலர் பணம் பெறுகின்றனர்.
இதில் உள்ள குழப்பத்தை சரிபார்க்கும்படி அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். திட்டத்தில் திருத்தம் செய்ய சொல்லவில்லை. எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களையும் சந்தித்தேன். அவர்களிடம் பேசியதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
