/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மந்தமாக நடக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு
/
மந்தமாக நடக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு
ADDED : மே 14, 2025 12:38 AM

தங்கவயல் : தங்கவயலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் மெத்தனமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான குழு சிபாரிசு படி, எஸ்.சி., சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள், கர்நாடகா முழுதும் நடந்து வருகிறது. தங்கவயலில் கணக்கெடுப்பு பணிகள் இம்மாதம் 5ம் தேதி துவங்கியது. வரும் 17ம் தேதி வரை நடப்பதாக உள்ளது. ஆனால், பல வார்டுகளில், அதன் பணிகள் இன்னும் துவங்கவே இல்லை என்ற புகார் எழுந்து உள்ளது.
இதுகுறித்து தங்கவயல் தாலுகா தாசில்தார் நாகவேணி கூறியதாவது:
ஓட்டுச்சாவடி அளவில் 221 ஆசிரியர்கள், வீடுதோறும் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். இவர்களை மேற்பார்வையிட 22 சூப்பர்வைசர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எஸ்.சி., ஜாதியில் ஆதி கர்நாடகா, ஆதி திராவிடர், ஆதி ஆந்திரா என உள்ளது. இதில் பல உட்பிரிவுகள் உள்ளன. பூர்வீக உட்பிரிவு எது என்பதையும் தெரிவித்து பதிவிட வேண்டும்.
குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை, ரேஷன் கார்டுகளை காண்பித்து சொல்ல வேண்டும்; புதிய பெயர்களும் சேர்க்கப்படலாம்.
பூர்வீக ஜாதி, உட்பிரிவு என்ன என்பதை பதிவு செய்ய வேண்டும். இதற்காக 'வெப்' தளமும் திறக்கப்பட்டுள்ளது. அதிலும் பதிவு செய்யலாம். இம்மாதம் 19 முதல் 21ம் தேதி வரை சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது. நேரில் வந்தும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள் சங்க தங்கவயல் தலைவர் நரசிம்ம மூர்த்தி கூறுகையில், ''ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் எந்த சமுதாயம்; உட்பிரிவு என்ன; உட்பிரிவில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விபரங்களை பெறவே அரசு கணக்கெடுப்பு நடத்துகிறது. அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். யாருக்கும் கவுரவ குறைச்சல் ஏற்படாது. அனைவருக்கும் பூர்வீக ஜாதி உட்பிரிவு உண்டு. குடும்ப முன்னோர்களை கேட்டறிந்து தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
தங்கவயலில் ஆரம்பத்தில் கணக்கெடுப்பு பணிகள் வேகமாக நடந்தன. இன்னும் பல வார்டுகளில் பணிகள் நடக்கவில்லை என்ற புகார் எழுந்து உள்ளது.