வாகனங்களுக்கு புகை பரிசோதனை கட்டணம் உயர்வு!: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
வாகனங்களுக்கு புகை பரிசோதனை கட்டணம் உயர்வு!: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
ADDED : ஆக 16, 2026 11:08 PM

வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள் மூலம் காற்று மாசடைகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரக வாகனங்களையும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, 'எமிஷன் டெஸ்டிங்' எனும் புகை பரிசோதனைக்கு விட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவில் வாகனங்களுக்கு புகை பரிசோதனை கட்டணத்தை திடீரென உயர்த்தி, போக்குவரத்து துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு 65 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 80 ரூபாயாகவும்; ஆட்டோக்களுக்கு 75ல் இருந்து 80 ஆகவும்; கார்களுக்கு 115ல் இருந்து 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
மற்ற வாகனங்களுக்கு 160 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
விலை உயர்வு காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அத்தியாவசிய, அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மீது விலையை உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருந்த நிலையில், தற்போது புகை பரிசோதனை கட்டணத்தை உயர்த்தி இருப்பது, வாகன ஓட்டிகளை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் உரிமையாளர்கள், அரசின் முடிவால் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், புகை பரிசோதனை மைய உரிமையாளர்கள், அரசின் உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பராமரிப்பு செலவு புகை பரிசோதனை மைய உரிமையாளர்கள் சங்க தலைவர் யோகேஷ் கூறியதாவது:
கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட, வாகன புகை பரிசோதனை மையங்களில், உள்நாட்டு இயக்க செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
பரிசோதனை மையங்களின் வாடகை, மின்சார கட்டண உயர்வு, ஊழியர்களுக்கு சம்பளம், நவீன பரிசோதனை உபகரணங்களின் பராமரிப்பு செலவு, பிரிண்டர் மை, காகிதம், எரிபொருள் விலையேற்றம் உட்பட பல விலை உயர்வால், நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்
மு ன், ஒரு வாகனத்திற்கு புகை பரிசோதனை சான்றிதழ் அளித்தால், அரசுக்கு 3 ரூபாய் 25 பைசா கொடுத்தோம். தற்போது 13 ரூபாய் 80 பைசா கொடுக்க வேண்டியுள்ளது. கடைசியாக கடந்த, 2021ல் கட்ட ணம் உயர்த்தப்பட்டது.
கடந்த, 2024 முதல் கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைத்தோம். இப்போது தான் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து உள்ளனர். புகை பரிசோதனை மையங்களை நடத்த முடியாமல், பல உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருந்தனர். தற்போதைய கட்டண உயர்வு எங்களுக்கு சற்று ஆறுதல் தரும் விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.1,000 அபராதம் பெங்களூரு நகரில் தினமும், 1.25 கோடி வாகனங்கள் சாலையில் ஓடுகின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க வாகன புகை பரிசோதனை செய்து, அதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர்.
வாகன சோதனையின் போது, வாகன புகை பரிசோதனை சான்றிதழும் உள்ளதா என்று சரிபார்க்கின்றனர்.
சான்றிதழ் இல்லாவிட்டால் முதல்முறை 1,000 ரூபாயும்; அதற்கு அடுத்த முறை 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் மூலம், வாகன புகை பரிசோதனை சான்றிதழ் மீது, போக்குவரத்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்தவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கட்டாயம் சான்றிதழ் எடுப்பது நல்லது.
