சாலை நடுவே படமெடுத்த பாம்பு வாகன போக்குவரத்து பாதிப்பு
சாலை நடுவே படமெடுத்த பாம்பு வாகன போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2026 11:09 PM

பெங்களூரு: திடீரென சாலை குறுக்கே வந்த பாம்பு, படமெடுத்து அமர்ந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமானது.
பெங்களூரின், வாகன போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ள சாலைகளில், அரண்மனை சாலையும் ஒன்றாகும். எப்போதும் வாகனங்கள் இயங்கும் பரபரப்பான சாலையாகும். நேற்று முன் தினம் மாலை, வழக்கம் போல வாகனங்கள் செல்லும் போது, எங்கிருந்தோ வந்த பாம்பு, சாலை மத்தியில் படமெடுத்து அமர்ந்து கொண்டது.
வாகனங்களின் சத்தத்துக்கும் அசரவில்லை. சாலை நடுவே படமெடுத்து அமர்ந்த பாம்பை கண்டு, அதிர்ச்சி அடைந்த வாகன பயணியர், உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினர். இதனால் அரண்மனை சாலையில் கி.மீ., கணக்கில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஹாரன் அடித்தும், பாம்பு நகரவே இல்லை.
அரை மணி நேரத்துக்கும் மேலாக, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையறிந்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார், பாம்புக்கு தொந்தரவு இல்லாமல், சூழ்நிலையை சரி செய்தனர். பாம்பு பிடி வல்லுநரை வரவழைத்து, பாம்பை பிடிக்க செய்தனர். அதன்பின் அரண்மனை சாலையில், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
