/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு அலுவலகத்தில் 15 நாள் இருந்த பாம்பு
/
அரசு அலுவலகத்தில் 15 நாள் இருந்த பாம்பு
ADDED : செப் 12, 2025 06:53 AM

ராய்ச்சூர்: கடந்த 15 நாட்களாக, அரசு அலுவலகத்தில் ஓய்வெடுத்த பாம்பு, நேற்று தலைகாட்டி, ஊழியர்களை கலங்கடித்தது.
ராய்ச்சூர் நகரின், மாவினகேரி சாலையில், கர்நாடக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை அலுவலகம் உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு, பாம்பு ஒன்று தவழ்ந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தது. தரையின் டைல்ஸ் நிறத்திலேயே பாம்பும் இருந்தது.
பாம்பை கண்ட அலுவலக உதவியாளர் வினய்குமார், உடனடியாக மற்ற ஊழியர்களிடம் கூறி, உஷார் படுத்தினார்.
அலுவலகத்தில் இருந்த எட்டு ஊழியர்களும், பாம்பை தேடினர்; எங்கும் தென்படவில்லை.
மறுநாள் பாம்பு பிடிப்பவரை வரவழைத்தனர். அவரும் ஒரு இடம் விடாமல் தேடியும், கண்களில் அகப்படவில்லை. அலுவலகத்தில் இருந்து, பாம்பு வெளியே செல்லவே இல்லை. உயிரை கையில் பிடித்தபடி ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
கால்களை கீழே வைக்காமல், இருக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து பணியாற்றினர். '12 நாட்களுக்கு மேல் ஆனதால், பாம்பு வெளியே சென்றிருக்கும்' என, அவர்கள் நினைத்தனர்.
ஆனால் அது எலிகளை, தவளைகளை தின்றபடி, அலுவலகத்தில் கோப்புகளுக்கு கீழே பதுங்கி இருந்தது. இதை ஊழியர்கள் கவனிக்கவில்லை.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் கூட்டமைப்பு தலைவர் ஹொன்னப்பா கூளப்பனவர், நேற்று மதியம் அலுவலகத்துக்கு வந்தபோது, பாம்பு வெளியே வந்து படமெடுத்து ஆடியது.
ஹொன்னப்பா சிறிதும் தாமதிக்காமல், பாம்பை பாதுகாப்பாக பிடித்துச் சென்று, ஏரி அருகில் விட்டு விட்டு வந்தார்.
அப்போது தான் ஊழியர்களுக்கு, பாம்பு அலுவலகத்திலேயே இருந்தது தெரிந்தது.
பாம்பு வெளியே கொண்டு விடப்பட்டதால், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.