/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெருநாய்கள் தத்தெடுப்பு பெங்களூரில் அதிகரிப்பு
/
தெருநாய்கள் தத்தெடுப்பு பெங்களூரில் அதிகரிப்பு
ADDED : பிப் 19, 2026 07:16 AM
பெங்களூரு: பெங்களூரில் தெருநாய்களுக்கான நலத்திட்ட இயக்கத்தை ஜி.பி.ஏ., துவக்கி உள்ளதால், தெருநாய்கள் தத்தெடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பெங்களூரில் தெருநாய்களுக்கான நல திட்ட இயக்கத்தை ஆரம்பித்து உள்ளது. இதன் மூலம் தெருநாய்களை தங்களின் செல்ல பிராணிகளாக வளர்க்கலாம். பெங்களூரு வடக்கு மண்டலத்தில் மட்டும், தன்னார்வ தொண்டு அமைப்புகள், 20 தெருநாய்களின் முகாம்களை அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்துள்ளனர்.
இந்த தத்தெடுப்பு முயற்சி, செல்லப்பிராணி பராமரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஒவ்வொரு நாய்க்கும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் அறுவைச் சிகிச்சை, காய்ச்சல் மற்றும் குருதிக்காய்ச்சல், ரேபிஸ் தடுப்பூசி, முழுமையான உடல்நல பரிசோதனை, அடையாள குறியீட்டு பட்டை பொருத்துதல் போன்ற செயல் முறைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தத்தெடுக்க அனுமதி வழங்கப் படுகிறது.
இந்த நடவடிக்கைகள் 2023 ம் ஆண்டின் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளின் படி மேற்கொள்ளப் படுகின்றன.
ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'இது வெறும் தத்தெடுப்பு முகாம் அல்ல. நகர்ப்புற விலங்குகளை அறிவியல் மற்றும் மனிதநேய அடிப்படையில் நிர்வகிக்கும் ஒரு முழுமையான திட்டமாகும். பெங்களூரு முழுதும் தத்தெடுப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
தெருநாய்களை தத்தெடுக்க விரும்புவோர், நகராட்சி விலங்கு பராமரிப்பு பிரிவை தொடர்பு கொள்ளலாம். மேலும், நகரில் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்கள் அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெருநாய் இனப்பெருக்க தொகையை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் நாய் மேலாண்மை தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை கொண்ட புதிய கொள்கை உருவாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன' என்றனர்.

