பைப் வெடித்து கடலில் கலந்த தார் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்
பைப் வெடித்து கடலில் கலந்த தார் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம்
ADDED : ஜூலை 14, 2026 04:01 AM
உத்தரகன்னடா: துறைமுகத்திற்கு படகில் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் தார், கடலில் கலந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓமன் நாட்டின், ஷினான் துறைமுகத்தில் இருந்து, 4,460 டன் தார் ஏற்றப்பட்ட வர்த்தக கப்பல், கர்நாடகாவின் உத்தரகன்னடாவுக்கு புறப்பட்டது. இந்த கப்பல் உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் நகரின் பைதகோல் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்தது. இதில் கொண்டு வரப்பட்ட தார்,கார்வார் நகரின், அலிகத்தாவில் உள்ள எம்.ஏ.சி.எல்., நிறுவனத்துக்கு சொந்தமானது.
கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தார், பைதகோல் துறைமுகத்தில் இருந்து, 'பைப்' வழியாக எம்.ஏ.சி.எல்., நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்போது, அழுத்தம் அதிகரித்து பைப் வெடித்ததில் அப்பகுதியில் தார் சிதறி நேரடியாக கடலில் விழுந்தது. நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான லிட்டர் தார், கடல் நீரில் கலந்தது. இந்த சம்பவத்தால், பைதகோல் துறைமுகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சம்பவம் நடந்தவுடன் ஊழியர்கள் தார் கசிவை தடுக்க, நடவடிக்கையை துவக்கினர். பல மணி நேர முயற்சிக்கு பின், தார் கசிவை கட்டுப்படுத்தினர். பைப்பை பழுது பார்த்தனர். ஆயினும் ஆயிரக்கணக்கான லிட்டர் தார், கடல் நீரில் கசிந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மீன், ஆமை உட்பட நீர் வாழ் உயிரினங்களுக்கு அபாயம் ஏற்படும் என, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நடந்த சம்பவத்துக்கு காரணம் என்ன. பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டனவா, ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
படகில் இருந்து தாரை, பைப் வழியாக பம்ப் செய்த போது, பைப் வெடித்து சிறிதளவு தார் கசிந்தது. அதன்பின் இன்ஜினை நிறுத்தி, கசிவை தடுத்து நிறுத்தினோம். கடல் நீ ரில் விழுந்த தார் கெட்டியானதால், நிறுவனத்தினர் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. சம்பவ இடத்தை கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிடுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
