ADDED : அக் 31, 2025 11:20 PM

உத்தரகன்னடா: குமட்டாவின் ராமனகின்டி கடற்கரையில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த தெலுங்கு திரைப்பட 'செட்' அலைகளில் அடித்துச் செல்லப்பட்டது. உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் பொருட்கள் கடலில் கலந்தன.
உத்தரகன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின் ராமனகின்டி கடற்கரையில், நடப்பாண்டு மார்ச்சில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு, பிரம்மாண்ட செட் போடப்பட்டது.
பழைய காலத்து படகு, துறைமுக கட்டடங்கள், வீடுகள், செட்கள் அமைக்கப்பட்டிருந்தன. ரயில், ஹெலிகாப்டர் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. திரைப்படத்தின் கிளைமேக்ஸ், சண்டை காட்சிகள், பாடல் காட்சிகளை இங்கு படமாக்க, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
மே மாதம் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மே இரண்டாவது வாரத்தில் மழை துவங்கியதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மழைக்காலம் முடிந்த பின் படப்பிடிப்பை நடத்தும் திட்டத்தில், கடற்கரையில் போடப்பட்டிருந்த செட், அப்படியே விடப்பட்டிருந்தது. காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால், அலையின் ஆர்ப்பரிப்பில் சிக்கி, படப்பிடிப்பு செட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது. பல பொருட்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. சில பகுதிகள், அரைகுறையாக காணப்படுகின்றன. எந்த நேரத்திலும் முழுதும் இடிந்து விழலாம்.
இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு அபாயம் ஏற்படலாம்.கடல் நீர் அசுத்தமாக காணப்படுகிறது. தற்போது வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளது. கடல் அலைகள் படப்பிடிப்பு செட்டை, சிறிது, சிறிதாக இழுத்துச் செல்கிறது. ஐந்தாறு ஏக்கரில் அமைக்கப் பட்ட செட், பாழடைந்த நகர் போன்று தென்படுகிறது.
இதை அப்புறப்படுத்தும்படி, பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
