ADDED : பிப் 25, 2026 05:42 AM
வாடகை பாக்கி இல்லையா?
ரா. பேட்டை மார்க்கெட்டை மேம்படுத்த பல முனைகளில் பல ஆண்டுகளாக பல முயற்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால், கோல்டு சிட்டியின் மிக பழமையான ஆ.பேட்டை மார்க்கெட் சிதைந்த நிலையில் சீர்கெட்டு உள்ளதே. இதை யாரும் கண்டு கொண்டதாக தெரியலையே.
இங்கு பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட ஒரு கழிப்பறை, யாருமே பயன்படுத்த முடியாதபடி துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புற சுகாதாரத்தை சீரழிக்கிறது. இதன்பேரில், ஏன் முனிசி., ஆபீசர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இங்கும் கூட பல லட்சம் பாக்கி இருப்பதாக முணுமுணுப்பு மட்டுமே இருக்குது. ஆனால் வசூலிக்க தயங்குவதன் உள்நோக்கம் என்னவோ. இங்கு இறைச்சி கடைகளுக்கான வியாபாரம் மட்டுமே நடக்குது. இறைச்சி உண்ணாதவங்க இந்த மார்க்கெட்டுக்குள் நுழைவதையே வெறுக்குறதாகவும் சிலர் சொல்றாங்க.
இறைச்சி கடைகளை சுகாதார முறைப்படி நடத்த சுகாதார அதிகாரிகள் ஏன் கண்டிப்பை காட்டல. வாடகை பாக்கி உள்ள ரா.பேட்டை கடைகளுக்கு சீல் வைக்கிற ஆபீசர்களே, ஆ.பேட்டை மார்க்கெட் கடைகளில் வாடகை பாக்கியே இல்லையா?
கண் திறக்காத கேமராக்கள்!
கோ ல்டு சிட்டியில் மூன்று ஆண்டுக்கு முன்பு, 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்படுத்தினாங்க. இதுக்காக பல லட்சங்களை செலவழிச்சாங்க. இந்த சுழலும் கேமராக்கள் 10 சதவீதம் கூட செயல்பாட்டில் இல்லையென விபரம் அறிந்தவங்க சொல்றாங்க.
ஆனால், இதன் பேரில் எந்த ஆக் ஷனும் ஆபீசர்கள் எடுக்கல. அந்த சுழலும் கேமராக்கள் கண் திறக்காமல் துாங்குகிறதா அதன் மிஷின்கள் செத்துப்போனதா. ஏழுமலையான் பிரம்மோற்சவம் நடப்பதால், மக்கள் நடமாடுகிற பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஏற்படுத்த போவதாக வட்டார நிர்வாக அதிகாரி தெரிவித்தாரு. அவரோ புதுசு. ஏற்கனவே நிறுவிய சிசிடிவி கேமராக்கள் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்ல ஆளில்லையோ?
சுயநலனுக்கா மனித உரிமை?
கு ழந்தைகள் திருமணம், 'போக்சோ' வழக்குகள், எஸ்.சி., - எஸ்.டி., பாதிப்பு, போதை பொருள் வழக்குகள் எல்லாம் மாவட்ட தலைநகரான கோலாரில் தான் விசாரணை நடந்து வந்தன. ஆனால், தற்போது அதனை புதுசா கோல்டு சிட்டியில விசாரிக்க ஒரு பிரிவை ஏற்படுத்த போறாங்களாம்.
இதுபோன்ற வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க காக்கிகள், பொதுநல, தன்னார்வ தொண்டு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துறாங்க. இதில், சில தொண்டு அமைப்புகள், கோல்டு சிட்டியில் மனித உரிமை பேரில், கட்டப்பஞ்சாயத்து நடத்தி, வசூல் வேட்டையில் இறங்கிட்டதா ஊர் பேசுது.
சிலர் சட்டத்தை கரைத்து குடித்தவங்க போலவும், இவங்க இருப்பிடமே கோர்ட்டாகவும், இவங்களே நீதிபதிகளாகவும் நாடகமாடுறாங்களாம். மனித உரிமையை பாதுகாக்கிறவங்க என்று வெளிப்படுத்த, அரசு ஆபீசர்களை மிஞ்சும் வகையில் அவரவர் வாகனங்களில் பிளேட்டுகளை பதித்திருப்பதை காண முடியுது. இவங்களை சட்டம் கண்டுக்குமா?

