ADDED : மார் 12, 2026 05:30 AM

* ரூ.15 லட்சம் முறைகேடு?
சட்டப்பிதா சிலை சிமென்டால் செய்யப்பட்டதை, பொன்னகரின் முனிசி., காம்பவுண்டில் நிறுவினாங்க. அது விரிசலடைந்துள்ளது. பெயின்ட் பூசும்போது அந்த விரிசல்களை மூடி மறைச்சிருக்காங்க. ஆனாலும், எந்த தருணத்திலும் விழலாம் என்ற அச்சம் இருக்குது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முனிசி., கூட்டத்தில் சிமென்ட் சிலையை அகற்றி, உலோகத்தாலான சிலையை நிறுவ தீர்மானிச்சாங்க. இதற்கான டெண்டரை, 2024ல் விட்டாங்க. மூன்று கான்ட்ராக்டர்கள் சிலை வேலையை பெற முன் வந்தாங்க. இதில் ஒருத்தர் 15 லட்சத்து 5,000 ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றார்.
இரண்டு ஆண்டுகளை கடந்தும், இன்னும் அங்குள்ள சிமென்ட் சிலையை அகற்றி புதிதாக மெட்டல் சிலையை நிறுவவே இல்லை. ஒதுக்கிய நிதி, 'ஸ்வாஹா' ஆனதா. யார் அந்த நிதியை முறைகேடு செய்தது. இப்பிரச்னையை பெரிசுபடுத்த சர்வ அமைப்புகள் ஒண்ணு கூடியிருக்காங்க. மாவட்ட நிர்வாகம் என்ன ஆக் ஷன் எடுக்க போகுதோ?
* திறந்தவெளி அவலம்!
விரைவில், உள்ளாட்சிகளுக்கு தேர்தல் வரப் போகுது. கோல்டு நகரில், 35 வார்டுகளில் 100க்கும் மேற்பட்டவங்க போட்டியிட தயாராகி வராங்க. பதவி அதிகாரத்துக்கு போட்டியிட துடிக்கிறவங்களில் யாருக்கும் சமூக அக்கறை இருக்கிறதா தெரியல.
மக்களோட வரி பணத்தில், 15 வருஷத்துக்கு முன்னாடி பல, 'சி' செலவிட்டு 40 பொதுக் கழிப்பறைகளை கட்டி முடிச்சாச்சு. அதற்குரிய தொகையை யார் யாருக்கு சேரணுமோ பிரிச்சு பிரிச்சு போய் சேர்ந்தாச்சு என்கிறாங்க.
ஆனாலும் கூட பொதுக் கழிப்பறைகளை இதுவரை திறக்காமல் மூடியே வெச்சிருக்காங்க. இப்பவும் திறந்த வெளியை நாடும் அவலம் தொடரலாமா. தேர்தலில் குதிக்க ஆர்வம் காட்டுறவங்க இதன் பேரில் கவனம் செலுத்தலாமே.
* தெருநாய்கள் அட்டகாசம்!
தெரு நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருது. இவைகளால் தொல்லைகளும் பெருகுது. இதை கட்டுப்படுத்த பொறுப்பானவங்க மனம் இரங்கலயே. தெருநாய்கள் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க. அதனால், இனப் பெருக்கம் குறைஞ்சதா தெரியல.
மான்கள் எண்ணிக்கை அவ்வப்போது குறைந்தவாறு உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்போரும் அச்சத்தில் இருக்காங்க. முதியோர், குழந்தைகள், பெண்கள் நடமாடவே அலறுவது வழக்கமா போச்சு. ரா.பேட்டை 2வது பிளாக் பகுதியில் 8 ஆடுகளை வெறிகொண்ட தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. அனைத்து சாலைகள், தெருக்களில் தெரு நாய்கள் அட்டகாசம் ஓவரா இருக்குதே. இவற்றை கட்டுப்படுத்த மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பது எப்போது?
* பினாமிகள் நடமாட்டம்!
பாதாளத்தில் இறங்கி பாறையை பிளந்து தங்கம் எடுக்கிற செலவு, தங்கத்தை விட கூடுதலாகிறதுன்னு சொல்லிதான் மைனிங் ஆப்பரேஷனை கை விட்டாங்க. ஆனால், பாதாளம் இறங்காமல் தரை மீது மலைபோல குவித்து வெச்சிருக்கிற சயனாட் மண்ணை அலசினாலே, 'தங்கம்' தங்குவதாக சொல்றாங்க.
இப்போ தங்கம் விற்கும் விலையில் அதனை எடுக்காமல், சும்மா விட்டு வெச்சிருக்காங்களே. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், என உலக நாடுகளை சேர்ந்தவங்க எல்லாம், டெல்லி செங்கோட்டையில் முகாமிட்டு, கோல்டு எடுக்க ஓல்டு பார்முலா பயன்படுத்தாமல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவடை செய்ய சில ம.மந்திரிகளின் வாசற்படியில் காத்திருந்தாங்க.
ஆயிரம், 'சி' வர்த்தகத்துக்கு பேரமும் பேசினதா சொல்றாங்க. ஆரம்பத்தில் முட்டைக்கு மட்டுமே ஆசைப்பட்டவங்க, இப்போ முழு கோழியே வேணும்னு ரூட்டை மாற்றிட்டாங்களாம். இப்போது சில பினாமிகள் கோல்டு சிட்டியில் நடமாடுறாங்களாம். எல்லாருமே நார்த்காரங்களாம்.

