ADDED : ஆக 05, 2026 11:07 PM

- நமது நிருபர் -
மனதை லேசாக்கும் அமைதியான சூழ்நிலை, இதமான தென்றல், சலசலவென பாயும் தண்ணீர், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான இயற்கை காட்சிகள். இவற்றை ரசிக்க வேண்டுமானால் ஹிரேகொளலே ஏரிக்கு வாருங்கள்.
சிக்கமகளூரு நகரில், ஹிரேகொளலே ஏரி உள்ளது. இது, சிக்கமகளூரு மக்களின் உயிர் நாடியாக விளங்குகிறது. 10 ஏக்கரில் அமைந்துள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலை சிகரங்களில் இருந்து பாய்ந்து வந்து, ஏரியை அடைவதை பார்ப்பதே, தனி சுகமாகும். ஏரி நீரில் சிறப்பு குணங்கள் நிறைந்துள்ளன.
தற்போது மழை பெய்துள்ளதால், ஏரியில் அதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளது. சுற்றுப்பகுதியில் பசுமையாக காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், இங்கு வருகின்றனர். கரையை தாண்டி பாயும் நீரை கண்டு மகிழலாம். சந்திரதுரோண மலைத் தொடர்ச்சியை காண வரும் சுற்றுலா பயணியர், ஹிரேகொளலே ஏரியையும் காண வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள், இளம்பெண்கள், காதலர்களுக்கு பிடித்தமான இடம் இதுவாகும். சுற்றிலும் பரவியுள்ள காபி தோட்டங்கள், ஏரியின் அழகை அதிகரிக்கின்றன.
மலைகள், பசுமையான இயற்கை காட்சிகளுக்கு இடையே, படுத்து கிடக்கும் இந்த ஏரியில் பல திரைப்பட படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
சிக்கமகளூருக்கு சுற்றுலா செல்வோர், மாலை சூரியன் அஸ்தமனமாகும் போது, இந்த ஏரிக்கு சென்றால் அற்புதமான காட்சியை காணலாம். சூரியன் ஏரிக்குள் சென்று மறைவதை போல இருக்கும்!
