ADDED : மே 04, 2026 10:54 PM

- நமது நிருபர் -
குண்டுலுபேட் தாலுகாவின் சிக்காடி கிராமத்தில் உள்ள பீரேஸ்வரா கோவில், புராதன பிரசித்தி பெற்றதாக இருந்தும், மக்களின் கவனத்துக்கு வரவில்லை. சில ஆண்டுகளாக பக்தர்கள் மற்றும் வரலாற்று வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், சிக்காடி என்ற குக்கிராமத்தில் அமைந்துள்ளது பீரேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். அற்புதமான கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள இக்கோவில், இப்போது தான் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, வாழ்க்கையை வளமாக்குவதில் பீரேஸ்வரர் பெயர் பெற்றவர். குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள், ஆசை நிறைவேறாமல் மனம் நொந்தவர்கள், கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம்.
வேண்டுதல் நிறைவேறிய பின், கோவிலில் பல்லக்கு ஊர்வலம் நடத்தி நன்றிக்கடனை செலுத்துவர். யாராவது தீராத நோயால் அவதிப்பட்டால், அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து பூவும், நீரும், காணிக்கையும் அர்ச்சகரிடம் கொடுப்பர்.
இவரும் பீரேஸ்வரர் சிலை முன்பாக, காணிக்கையை வைத்து, அவர்கள் கொண்டு வந்த நீரில், கடவுளுக்கு அபிஷேகம் செய்து, அந்த நீரையும், பூவையும் பிரசாதமாக கொடுப்பார்.
வாங்கி சென்று நோயாளியிடம் பூவை கொடுத்து நீரை தெளித்தால் அவரது நோய் குணமாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. இது போன்று பலருக்கு நோய் குணமாகியுள்ளது.
சிக்காடி கிராமத்தினர், தங்கள் குடும்பத்தில் யாருக்காவது நோய் ஏற்பட்டால், டாக்டரிடம் செல்வது இல்லை. மாறாக பீரேஸ்வர் கோவிலுக்கு வந்து தீர்த்தம் வாங்கி சென்று, நோயாளி மீது தெளிப்பது வழக்கம். கோவிலின் சிறப்புகளை அறிந்து, பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி பண்டிகை, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கோவிலில் கண் விழிப்பர்.
இரவு முழுதும் பஜனை, கீர்த்தனைகள், சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆண்டு தோறும் நடக்கும் பல்லக்கு உற்சவத்தில், சிவனுடன், நந்தி சிலையும் ஊர்வலத்தில் கொண்டு செல்வது, கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.
