/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
கை மணத்தால் வாடிக்கையாளர்களை கட்டி போட்ட ரகசியம்
/
கை மணத்தால் வாடிக்கையாளர்களை கட்டி போட்ட ரகசியம்
கை மணத்தால் வாடிக்கையாளர்களை கட்டி போட்ட ரகசியம்
கை மணத்தால் வாடிக்கையாளர்களை கட்டி போட்ட ரகசியம்
ADDED : நவ 24, 2025 03:32 AM

வாழ்க்கையில் வெற்றி பெற, பணமோ, வசதிகளோ தேவையில்லை. பணத்தால் வெற்றியை வாங்க முடியாது. சோம்பல் அற்ற கடினமான உழைப்பால் மட்டுமே எதையும் அடையலாம். இதற்கு ரூபா பாட்டீல் சிறந்த உதாரணம். இவரது வாழ்க்கை மற்ற பெண்களுக்கு, முன் மாதிரியாக உள்ளது.
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவில் வசிப்பவர் ரூபா பாட்டீல், 52. இவருக்கு திருமணமாகி கணவரும், பிள்ளைகளும் உள்ளனர். கணவரின் சம்பாத்தியம் குடும்பத்தை நிர்வகிக்க போதுமானதாக இல்லை. பிள்ளைகளின் கல்விக்கு பணத்தேவை ஏற்பட்டது.
பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து, ரூபா கவலைப்பட்டார். எனவே குடும்பத்தை காப்பாற்றவும், பிள்ளைகளின் கல்வியை மனதில் கொண்டும், குடும்ப பாரத்தை சுமக்கவும், கணவருக்கு தோள் கொடுக்க ரூபா முடிவு செய்தார்.
அன்பான உபசரிப்பு என்ன செய்வது என ஆலோசித்த போது அவரது சமையல் திறமை கை கொடுத்து உதவியது. 2008ம் ஆண்டு சிறிய உணவகம் துவங்கினார். ஆரம்ப நாட்களில் தினம் 10 வாடிக்கையாளர்கள் கூட வரவில்லை.
ஆனால் ரூபா மனம் தளரவில்லை. சுவையாகவும், தரமாகவும் உணவு தயாரித்து வழங்கினார். உணவின் சுவை, அவரது அன்பான உபசரிப்பு, உணவகத்தின் துாய்மை போன்ற காரணங்களால், நாளடைவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.
இவர் அக்க மஹாதேவி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். எனவே தன் ஹோட்டலுக்கு, 'அக்கா பிரசாத நிலையா' என, பெயர் சூட்டியுள்ளார். வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் துவங்கிய உணவகத்தில், தற்போது ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரை, வியாபாரம் நடக்கிறது.
வெற்றியின் ரகசியம் ரூபாவின் கை மணம், வாடிக்கையாளர்களுக்கு தங்களின் தாயை நினைவூட்டும். இதுவே அவரது வெற்றியின் ரகசியம். ஒரு முறை சாப்பிட்டவர்கள், மீண்டும், மீண்டும் வருவர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு முறை அதானிக்கு வருகை தந்த போது, அக்கா பிரசாத நிலையத்தில் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
அதானியில் பிரபலமான ஹோட்டல் என, பெயர் பெற்றுள்ளது. இங்கு 15 பெண்களுக்கு, ரூபா வேலை வாய்ப்பு அளித்துள்ளார்.
வறுமை, கணவரின் சம்பாத்தியம் போதவில்லை என, புலம்பாமல் தனக்கு தெரிந்த சமையல் வித்தையை பயன் படுத்தி, வாழ்க்கையில் முன்னேறிய இவர், மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்.
இது குறித்து, ரூபா கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில், என்னை போன்ற பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். போராட்ட குணம் இருந்தால் மட்டுமே, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும்.
எனது உணவு கை மணம், அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும் என்பதே, என் குறிக்கோள். மேலும் பல இடங்களில் உணவகத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.
அக்க மஹாதேவி தியாகம், சேவை மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே உணவகத்துக்கு அவரது பெயரை வைத்தோம்.
பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை வைத்து கொண்டு, குடும்பத்தை துாக்கி நிறுத்தலாம். இதற்கு கடுமையான உழைப்பு அவசியம். என் கணவரும், பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுப்பதால், என்னால் சாதிக்க முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .

