/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரிகளை சீரமைத்து வரும் இளம் தலைமுறையினர்
/
ஏரிகளை சீரமைத்து வரும் இளம் தலைமுறையினர்
ADDED : மார் 15, 2026 05:42 AM

இன்றைய இளம் தலைமுறையினருக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக ஆர்வம் உள்ளது. சிலர் தங்களது ஓய்வு நேரத்தை இதற்காக செலவிடுகின்றனர். ஆனால், இளைஞர் ஒருவர், கார்ப்பரேட் பணியை விட்டு விட்டு, ஏரிகளை சீரமைக்கும் பணியை செய்து வருகிறார்.
பெங்களூரு ஒரு காலத்தில், ஆயிரம் ஏரிகள் உள்ள நகராக இருந்தது. இன்று, கான்கிரீட் காடாக மாறியுள்ளது. ஏரிகள் இருந்த இடங்கள் குடியிருப்பாக, பஸ் நிலையங்களாக, விளையாட்டு அரங்கங்களாக, வானுயர்ந்த கட்டடங்களாக மாறியுள்ளன. ஏரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொலைநோக்கு பார்வையுடன், கெம்பேகவுடா ஏரிகளை உருவாக்கினார். நகரமயமானதால் இவைகள் மாயமாகி விட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட சிலரின் முயற்சியால், கழிவுகள் கலந்து குப்பை தொட்டியாக தென்பட்ட ஏரிகள், தற்போது மறுவாழ்வு பெற்றுள்ளன. அவர்களில் ஹர்ஷா தேஜும் ஒருவர். இவருடன் நடிகரும், இயக்குநருமான ராஜ்ஷெட்டியும் கைகோர்த்துள்ளார்.
பெங்களூரில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் ஹர்ஷாதேஜ். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், ஏரிகள் சீர்குலைந்திருப்பதை கண்டு மனம் வருந்தினார்.
விவசாயம் மற்றும் பொதுமக்களின் தேவைக்கு மட்டுமின்றி, நகரை அழகாக்கவும் ஏரிகள் தேவை என்பதை உணர்ந்தார். கைநிறைய ஊதியம் கிடைத்த வேலையை உதறிவிட்டு, ஏரிகளை சீரமைப்பதில் ஈடுபட்டார்.
இவரது நல்ல நோக்கத்தில், நடிகர் ராஜ்ஷெட்டியும் கைகோர்த்துள்ளார். இவர்கள் மற்றொரு சமூக ஆர்வலர் குருநந்தன் ராவுடன் சேர்ந்து, ஏரிகளை சீரமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். சர்ஜாபுரா, விமான நிலைய சாலை உட்பட சுற்றுப்புறங்களில், 12 முதல் 15 ஏரிகளை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
ஏரிகளை சுற்றிலும் மரக்கன்றுகள் நடுவது, மண், கழிவுகளை அள்ளுவது, நீரை சுத்திகரிப்பது என, பல பணிகளை செய்கின்றனர். ஏரிகளை சீரமைப்பதுடன் அவைகள் மீண்டும் பாழாகாமலும் கண்காணிக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இவர்கள் செய்யும் சேவை, மற்றவருக்கு முன்னுதாரணமாகவும், உந்துதலாகவும் உள்ளது.
ஹர்ஷா தேஜ் கூறியதாவது:
விலங்குகள், பறவைகள் உயிர் வாழ, ஏரிகள், சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். ஆனால், எங்கள் பணிக்கு சிலர் மட்டுமே உதவுகின்றனர். அதிகமான மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் வர வேண்டும். எங்களுக்கு சிறு வயதில் இருந்தே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் அதிகம்.
மக்கள் மனம் வைத்தால் மட்டுமே, ஏரிகளின் சூழ்நிலை மாறும். தண்ணீரின் தேவை மற்றும் மகத்துவத்தை அவர்கள் உணர வேண்டும்.
மழை நீர் சேகரிப்பு வசதி செய்து கொள்ள வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் பிரச்னை ஏற்படுகிறது. மழைநீர் பூமிக்குள் செல்லாமல், சாக்கடைகளில் பாய்கிறது. இதை தவிர்க்க நம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பது அவசியம்.
ஒவ்வொருவரும் இதை செய்தால், அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரில் தண்ணீர் பிரச்னை என்பதே இருக்காது. மழை நீரை வீணாக்க கூடாது. சேகரித்து பயன்படுத்தும் மனப்போக்கு ஏற்பட வேண்டும். இது மக்களின் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

