/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாதாமி சாளுக்கியர்கள் கட்டிய திருக்குட்டேஸ்வரா கோவில்
/
பாதாமி சாளுக்கியர்கள் கட்டிய திருக்குட்டேஸ்வரா கோவில்
பாதாமி சாளுக்கியர்கள் கட்டிய திருக்குட்டேஸ்வரா கோவில்
பாதாமி சாளுக்கியர்கள் கட்டிய திருக்குட்டேஸ்வரா கோவில்
ADDED : ஜன 27, 2026 04:48 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் வடமாவட்டமான கதக், பழங்கால கோவில்கள், வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களுக்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு பாதாமி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலை பற்றி பார்க்கலாம்.
கதக் டவுனில் உள்ளது திருக்குட்டேஸ்வரா கோவில். இந்த கோவிலுக்கு திரிகூடேஸ்வரா என்ற பெயரும் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலை, பாதாமி சாளுக்கியர்கள் கட்டினர். கட்டட கலைஞர் அமர ஷில்பி ஜகனாச்சாரி திட்டத்தின்படி, பார்த்து, பார்த்து கட்டப்பட்ட இக்கோவில், கட்டட கலைக்கு தற்போதும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது,
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மூன்று லிங்கங்கள்; கல்வி கண் திறக்கும் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னிதி உள்ளது. இதுதவிர பிரம்மா, மகேஸ்வரர், விஷ்ணு, காயத்ரி, சாரதா தேவியருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. கோவில் வளாகத்தில் கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படும் கிணறு உள்ளது. இதன் வடிவமைப்பும் பிரம்மிப்பாக உள்ளது. குறுகிய பாதை வழியாக சென்று கிணற்றை அடைய முடியும். முழுக்க, முழுக்க கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலுக்கு, வடமாவட்டங்களில் உள்ள ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தற்போது கதக்கின் லக்குண்டி பகுதியில், பழங்கால பொருட்கள் நிறைய கிடைத்து இருப்பதால், அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. கோவிலில் இருந்து லக்குண்டி, 13 கி.மீ., துாரத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கோவில் நடை தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.

