/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போக்குவரத்து சங்க தலைவர் மறைவு; 'பெங்களூரு போராட்டம்' ஒத்திவைப்பு
/
போக்குவரத்து சங்க தலைவர் மறைவு; 'பெங்களூரு போராட்டம்' ஒத்திவைப்பு
போக்குவரத்து சங்க தலைவர் மறைவு; 'பெங்களூரு போராட்டம்' ஒத்திவைப்பு
போக்குவரத்து சங்க தலைவர் மறைவு; 'பெங்களூரு போராட்டம்' ஒத்திவைப்பு
ADDED : ஜன 29, 2026 06:58 AM

பெங்களூரு: 'நிலுவையில் உள்ள 38 மாத ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது. நேற்று மாலை சங்க தலைவர் அனந்த சுப்பாராவ் மாரடைப்பால் உயிரிழந்ததால், இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
'கடந்த 2020 முதல் 2023 வரை, 38 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்கல்; போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து, சம ஊதியம் வழங்கல்; போக்குவரத்து கழகங்களில் தனியார்மயமாக்கல், தொழிலாளர்கள் துன்புறுத்தலை முடிவுக்கு கொண்டு வருதல்; அனைத்து ஊழியர்களுக்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதி வழங்குதல்; ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்குதல்;
'புதிய ஊதிய விதிதத்தை 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்துதல்; தொழிலாளர்களுக்கான உணவக வசதி மேம்படுத்தல்; 2020 மற்றும் 2021 வேலை நிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளையும் திரும்ப பெறுதல்; மின்சார பஸ்களுக்கு கழகங்களின் ஓட்டுநர்களை நியமித்தல்; மின்சார பஸ் பராமரிப்பை, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையை ரத்து செய்வது' உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
'எஸ்மா' கடந்தாண்டு முதல்வருடன் நடந்த பேச்சு தோல்வி அடைந்ததால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டித்ததால், போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
அத்துடன், மாநில அரசு டிச., 31ம் தேதி வரை 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தியது. இதனால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.
டிசம்பர் மாதம் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நடப்பாண்டு ஜன., முதல் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த அரசு, மீண்டும் ஆறு மாதங்களுக்கு, 'எஸ்மா' சட்டத்தை நீட்டித்தது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, இன்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் 'பெங்களூரு போராட்டம்' நடத்த போக்குவரத்து ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு தீர்மானித்து உள்ளது.
மேலும், இன்று மாலை 4:00 மணிக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், நாளை (ஜன., 30ம் தேதி) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் அனந்த சுப்பாராவுக்கு, 85, நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரு விஜயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது உதவியாளர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''மாரடைப்பால் உயிரிழந்த அனந்த சுப்பாராவ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து ஊழியர்களுக்காக போராடி வந்தார். அவரின் மறைவை தொடர்ந்து, நாளை (இன்று) நடக்கவிருந்த 'பெங்களூரு போராட்டம்' ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதனால், இன்று பஸ்கள் வழக்கம்போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

