ADDED : ஜூன் 21, 2026 10:43 PM
பெங்களூரு: ஏரியில் விளையாடும் போது தவறி விழுந்த இரட்டை சகோதரர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவின், முருள்யா கிராமத்தில் வசிப்பவர் வசந்த். இவருக்கு, 5 வயதில் ஜஸ்வின் மற்றும் ஜஸ்வித் என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
யு.கே.ஜி., படித்து வந்த இவர்களை, வழக்கம் போல, நேற்று முன்தினம் மதியம், பள்ளியில் இருந்து அழைத்து வந்த தாய், அவர்களை வீட்டில் இருக்க வைத்து விட்டு, தோட்டத்தில் வேலைக்கு சென்றிருந்தார்.
மாலையில், பெற்றோர் வீடு திரும்பிய போது, மகன்களை காணவில்லை. பீதியடைந்து, சுற்றுப்பகுதிகளில் தேடினர். எங்கும் இல்லை. அதன் பின், வீட்டின் அருகில் உள்ள ஏரியில், சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏரியில் விளையாடும் போது, தவறி விழுந்து சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
அங்கு வந்த பெள்ளாரே போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், இரட்டை சிறுவர்களின் உடல்களை மீட்டு, அவர்களின் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
