ADDED : அக் 07, 2025 04:56 AM

தாவணகெரே: பரிசல் கவிழ்ந்து துங்கபத்ரா நதியில் மூழ்கிய இருவரை தேடி வருகின்றனர்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலியை சேர்ந்தவர்கள் திப்பேஷ், 19, முக்தியார், 25, உட்பட நான்கு பேர் நேற்று காலை துங்கபத்ரா நதியில் பரிசலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை கரையில் இருந்து பார்த்தவர்கள், உடனடியாக நதியில் குதித்து இருவரை மீட்டனர். இருவர் நீரில் மூழ்கினர்.
இதுகுறித்து ஹொன்னாலி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீரில் மூழ்கிய இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இளைஞர்கள் மீன் பிடிக்க சென்றபோது பரிசல் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அப்பகுதி மக்களோ, 'ஆற்றில் இருந்து மணல் அள்ளும்போது பரிசல் கவிழ்ந்து உயிரிழந்தனர்' என குற்றஞ்சாட்டி உள்ளனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
