ADDED : ஜூலை 31, 2025 05:58 AM
ஷிவமொக்கா : ஷிவமொக்கா நகரின் காஜனுார் அணை அருகில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், லாரி ஒன்று பழுதடைந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில், மங்களூரில் இருந்து, சித்ரதுர்காவின், செல்லகெரே தாலுகாவுக்கு சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ் நடத்துநர் அன்னப்பா, 40, பயணி ஹர்ஷித், 35, ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 15 பயணியர் காயமடைந்து, ஷிவமொக்காவின், மெக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த விபத்தால் மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த துங்கா நகர் போலீசார், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
லாரி இருளில் நின்றிருந்ததாலும், பஸ் அதிவேகமாக சென்றதும் விபத்துக்கு காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து, துங்கா நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.