ADDED : ஆக 13, 2026 11:16 PM

- நமது நிருபர் -:
சிங்கப்பூரில் செப்டம்பர் 15 - 20ம் தேதி வரை, 12 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நடத்துகிறது. இப்போட்டியில், இந்திய அணி சார்பாக மூன்று வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், மஹாராஷ்டிராவை சேர்ந்த ரியானை தவிர மற்ற இருவரும், கர்நாடகாவை சேர்ந்தவர்களே.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரை சேர்ந்த தனுஷ் சேகர், தனுஷ் ஆகிய இரண்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பெங்களூரை சேர்ந்த இரண்டு தனுஷ்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்திற்கு பல பதக்கங்களை வாங்கி பெருமை சேர்த்து உள்ளனர்.
இந்தியாவில், 12 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் வீரர்களின் தர வரிசையில் தனுஷ் சேகர் இரண்டாவது இடத்திலும், தனுஷ் மூன்றாவது இடத்திலும் தற்போது உள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம், நேபாளத்தில் நடந்த, 14 வயதுக்கு உட்பட்டவருக்கான டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். தற்போது, சிங்கப்பூர் சென்று டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
உலக அளவில் சிறப்பான வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். நேபாளத்தில் நடந்த போட்டியில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தந்தது. இந்த மகிழ்ச்சி தொடர விரும்புகிறோம். மீண்டும் இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்து உள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
