ADDED : ஆக 01, 2026 06:37 AM

பெங்களூரு: ''கொசுக்களால் பரவும் நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, பெங்., மத்திய மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் கூறி உள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என, கொசுக்களால் பரவும் நோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நோய் பரவும் ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகை அடிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்கள், கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் முதல் கட்டமாக கொசு மருந்து அடிக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
மலேரியா, டெங்கு உருவாக்கும் கொசுக்களை ஆரம்பத்திலேயே அழிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மக்கள் தங்கள் வீட்டருகில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதை உறுதி செய்யவும். கொசு ஒழிப்பில் மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளால் மட்டும் எதையும் செய்துவிட முடியாது. கொசு ஒழிப்பில் பொது மக்களின் பங்களிப்பும் முக்கியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
