ADDED : ஆக 20, 2025 07:56 AM
பெங்களூரு : தொடர் மழை காரணமாக பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறியவர்களின் பாதிப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாநிலத்தில் பருவமழைக் காலம் துவங்கிய நாள் முதல், ஒரு வாரம் மழை, ஒரு வாரம் வெயில் என மாறி மாறி வரும் வானிலையால், பெங்களூரில் உடல் நலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இருமல், சளி, வாந்தி, காய்ச்சல், டைபாய்டு, வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் இருமல், சளி, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கே.சி., ஜெனரல், வாணி விலாஸ், விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
தற்போது வைரஸ் காய்ச்சல்களால் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஆபத்தானது அல்ல. இந்த காய்ச்சல் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே நீடிக்கும். கவலைப்பட தேவையில்லை.
அதேவேளையில், கடும் குளிரால், கர்ப்பிணியருக்கு காய்ச்சல், குளிர் ஏற்படுவது அதிகரித்துள்ளது. தினமும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர். தினமும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
குழந்தைகளுக்கு குளிர் ஏற்படாத வகையில் சூடாக வைத்திருங்கள். மழையிலோ அல்லது குளிரிலோ அவர்களை வெளியே அனுப்பாதீர்கள். காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். மக்கள் தங்கள் உடல் நலத்தில் சிறிது கவனமாக இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
