ADDED : ஜூன் 14, 2026 05:05 AM

ஷிவமொக்கா: கைதிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறை வார்டன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஷிவமொக்காவை சேர்ந்த ஹிந்து ஆர்வலர் ஹர்ஷா 2021ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், தார்வாட் மாவட்ட மத்திய சிறையில் கைதிகளாக இருப்பவர்கள் முகமது காசிப், ரேஹான் ஷெரிப். இவர்கள் இருவரும் நேற்று சிறை வார்டன் கிரணிடம் பிரச்னை செய்தனர். அவர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். கையில் கிடைத்த பொருட்களை வைத்து வார்டனை தாக்கினர். இதில், அவர் படுகாயம் அடைந்தார். சிறைத்துறை அதிகாரிகள் வார்டன் கிரணை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வார்டனை தாக்கிய கைதிகள் மீது தார்வாட் புறநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறை விதிகளை மீறி செயல்பட்ட இரண்டு கைதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு கைதிகளையும் அவர்களது குடும்பத்தினர்கள் ஒரு மாதம் சந்திப்பதற்கு அனுமதி கிடையாது' என்றனர்.
