/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைரதி பசவராஜுக்கு பக்கபலமாக பா.ஜ., நிற்பது ஏன்?
/
பைரதி பசவராஜுக்கு பக்கபலமாக பா.ஜ., நிற்பது ஏன்?
ADDED : பிப் 17, 2026 11:51 PM

கொலை வழக்கில் போலீஸ் காவலில் உள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு, அவரது கட்சி ஆதரவாக உள்ளது.
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், 62. பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்போது சி.ஐ.டி., காவலில் உள்ளார். கொலை வழக்கில் எம்.எல்.ஏ., மீது குற்றச்சாட்டு எழுந்த போதும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், கட்சியில் இருக்கும் யாரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை.
ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பின், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உள்ளிட்டோர், 'பைரதி பசவராஜ் மீது எந்த தவறும் இல்லை. காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறது' என்று கூற ஆரம்பித்து உள்ளனர்.
பைரதி பசவராஜுக்கு கட்சி ஆதரவு அளிப்பதன் பின்னணியிலும் அரசியல் உள்ளது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட, ஐந்து மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
40 வார்டுகள் பைரதி பசவராஜ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் கே.ஆர்.புரம் தொகுதி, கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. கே.ஆர்.புரத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக உள்ள பைரதி பசவராஜ் மூலம், கிழக்கு மாநகராட்சியில் உள்ள 50 வார்டுகளில் 30 முதல் 40 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது, பா.ஜ.,வின் இலக்கு.
தற்போது சி.ஐ.டி., காவலில் இருக்கும் பைரதி பசவராஜ், சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு ஜாமின் கிடைத்து வெளியே வந்ததும், ஜி.பி.ஏ., தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுக்கி இருந்துவிட கூடாது என்பதற்காக, அவருக்கு ஆதரவாக இருப்பது போன்று, கட்சி தலைவர்கள் காட்டி கொள்வதாக பேச்சு அடிபடுகிறது.
ரியல் எஸ்டேட் இது ஒருபுறம் இருக்க, பைரதி பசவராஜ் கைதின் பின்னணியில் குருபா சமூக தலைவர் பிரச்னையும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சித்தராமையா ஆதரவாளராக இருக்கும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ், குருபா சமூகத்தை சேர்ந்தவர்.
ஹெப்பால் தொகுதி எம். எல்.ஏ.,வாக உள்ள அவர், ஹெப்பாலில் இருந்து கே.ஆர்.புரம் வரை உள்ள, வெளிவட்ட சாலை பகுதி முழுதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார். இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார்.
பைரதி பசவராஜும் குருபா சமூகத்தை சேர்ந்தவர். அவரும் வெளிவட்ட சாலை பகுதியில் செல்வாக்கு செலுத்துகிறார். தனது ஆதரவாளர்கள் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். பிக்லு சிவா கொலை நடந்ததே, ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசில் இருந்த போது இரண்டாம் கட்ட தலைவராக இருந்த பைரதி பசவராஜ், பா.ஜ.,வுக்கு சென்றதும் பெரிய தலைவராக உருவெடுக்க ஆரம்பித்தார். கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். அரசியல்ரீதியாக அவர் வளர்ந்துவிட கூடாது என்பதால், காங்கிரசில் உள்ள குருபா சமூகத்தினரே அவருக்கு எதிராக சதி செய்தததாகவும் பேச்சு உள்ளது.
முதல்வர் சித்தராமையாவும் குருபா சமூகத்தை சேர்ந்தவர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
- நமது நிருபர் -

