/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரதட்சணைக்காக மனைவி கொலை? தண்ணீர் தொட்டியில் சடலம் வீச்சு
/
வரதட்சணைக்காக மனைவி கொலை? தண்ணீர் தொட்டியில் சடலம் வீச்சு
வரதட்சணைக்காக மனைவி கொலை? தண்ணீர் தொட்டியில் சடலம் வீச்சு
வரதட்சணைக்காக மனைவி கொலை? தண்ணீர் தொட்டியில் சடலம் வீச்சு
ADDED : அக் 16, 2025 11:15 PM
கதக்: வரதட்சணைக்காக, மனைவியை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் சடலத்தை கணவர் வீசியதாக புகார் எழுந்துள்ளது.
கதக் மாவட்டம், ஷிரஹட்டி தாலுகாவின் மஜ்ஜூர் கிராமத்தில் வசிப்பவர் மஹாந்தேஷ், 25. இவருக்கும், பிரியங்கா, 21, என்பவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு, திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பின், பெற்றோரிடம் மேலும் பணம் வாங்கி வரும்படி, தினமும் மனைவியை மஹாந்தேஷ் சித்ரவதை செய்தார். 'பணம் கொடுத்தால் மட்டுமே, தீபாவளி பண்டிகைக்கு தாய் வீட்டுக்கு அனுப்புவேன். இல்லாவிட்டால் அனுப்ப முடியாது' என, மனைவியை மிரட்டினார். அறையில் அடைத்து வைத்தார்.
இந்நிலையில், மஹாந்தேஷ் வீட்டில் இருந்து, சிறிது துாரத்தில் நாராயணா லட்சுமண் துளசி என்பவரின் வீடு உள்ளது. இவரது வீட்டு முன் தண்ணீர் தொட்டி உள்ளது. அது எப்போதும் மூடியே இருக்கும். நேற்று காலை நாராயணா கதவை திறந்து, வெளியே வந்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டி திறந்திருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, பெண்ணின் சடலம் மிதப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஷிரஹட்டி போலீசார், தொட்டியில் இருந்த உடலை மீட்டபோது, அது பிரியங்கா என்பது தெரிந்தது. அவரை கணவர் வரதட்சணைக்காக, அடித்துக் கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரியங்காவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மஹாந்தேஷ் குடும்பத்தினர் மறுக்கின்றனர். தண்ணீர் எடுக்க சென்றபோது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்கின்றனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர். கணவர் மஹாந்தேஷ், மாமனார் ஹனுமந்தப்பாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரிக்கின்றனர். மாமியார் லக்கவ்வா, நாத்தனார் சோனவ்வாவிடமும் விசாரணை நடக்கிறது.