பக்கவாதத்தால் பாதித்த கணவரை கொன்ற மனைவி, இருவர் கைது
பக்கவாதத்தால் பாதித்த கணவரை கொன்ற மனைவி, இருவர் கைது
ADDED : செப் 12, 2026 11:19 PM
ஆவலஹள்ளி: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை கொலை செய்து, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கித்தகனுாரின் எல்லப்பா கார்டனில் வசித்தவர் முபாரக், 40. இவரது மனைவி ஹசீனா பானு, 35.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முபாரக், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். இவரை பார்த்து கொள்வது ஹசீனா பானுவுக்கு, மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதற்கிடையே, தம்பதியின் மகள் ஷஹீனாவும் உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். இவ்வேளையில் நஹீம் உத்தீன் குரேஷி, 45, என்பவர் மகள் ஷஹீனாவுக்கு அறிமுகமானார். அவ்வப்போது வீட்டுக்கு வந்த இவருக்கும், ஷஹீனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கணவரை பார்த்து கொள்வது கஷ்டமாக இருந்ததால், அவரை கொலை செய்யும்படி, நஹீம் உத்தீன் குரேஷியிடம் மனைவி ஷசீனா பானு கேட்டுக்கொண்டார்.
இதன்படி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி ஷஹீனாவும், அவரது தாய் ஹசீனா பானுவும் சேர்ந்து முபாரக்கை கழுத்தை நெரித்தும், அவரது மர்ம உறுப்பை தாக்கியும் கொலை செய்தனர். அதன் பின், அவர் மாரடைப்பால் இறந்ததாக, தாயும், மகளும் நாடகமாடினர்.
ஆனால், முபாரக்கின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த உறவினர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. ஆவலஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து, முபாரக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையை துவக்கினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், முபாரக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
எனவே ஹசீனா பானுவை, போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது, கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். இவரையும், இவரது மகள் ஷஹீனா, அவரின் கள்ளக்காதலர் நஹீம் உத்தீன் குரேஷியையும், நேற்று கைது செய்தனர்.
