/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிராம மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது
/
கிராம மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது
கிராம மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது
கிராம மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டது
ADDED : பிப் 14, 2026 04:53 AM

மைசூரு: மைசூரு அருகே, கிராம மக்களை அச்சுறுத்திய காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
சாம்ராஜ்நகரின் பண்டிப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு உட்பட்ட மொளேயூர் வனப்பகுதியில் இருந்து, 20 நாட்களுக்கு முன் இரும்பு தடுப்பு கம்பியை உடைத்து கொண்டு, காட்டு யானை வெளியேறியது.
மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கடவலு, மடாடகட்டே கிராமங்களில் புகுந்து, கிராம மக்களை அச்சுறுத்தியது. விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தியது. காட்டு யானையை பிடிக்க, ஏகலவ்யா, சுக்ரீவா, பிரசாந்த், அய்யப்பா என, நான்கு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக, கும்கிகளின் உதவியுடன் காட்டு யானை தேடப்பட்டது. நேற்று காலை கடவலு கிராமத்தில் உள்ள விளைநிலத்தில், காட்டு யானை நின்றது. கும்கிகளை அழைத்து கொண்டு அங்கு வனத்துறையினர் சென்றனர். துப்பாக்கி மூலம் காட்டு யானையின் மீது, கால்நடை மருத்துவர் வாசிம் மிர்சா மயக்க ஊசி செலுத்தினர். சிறிது துாரம் ஓடிய யானை மயங்கி விழுந்தது.
யானையின் உடலில் வனத்துறையினர் கயிறு கட்டினர். சிறிது நேரத்தில் கண்விழித்த யானை பிளிறியது. கும்கிகள் ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றன. பிடிபட்ட யானை லாரியில் ஏற்றப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
காட்டு யானையின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டு யானை பிடிபட்டதால் கடவலு, மடாடகட்டே கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

