/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காட்டு முயல் வேட்டை எம்.எல்.ஏ., மகன் சேட்டை
/
காட்டு முயல் வேட்டை எம்.எல்.ஏ., மகன் சேட்டை
ADDED : ஏப் 02, 2025 06:36 AM

ராய்ச்சூர் : காட்டு முயலை வேட்டையாடியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகன், தம்பிகள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மஸ்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா துர்விஹால். இவரது மகன் சதீஷ் கவுடா. இவர், யுகாதியன்று, சிந்தனுார் தாலுகா துர்விஹால் நகரில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, கையில் வைத்திருந்த ஒரு கம்பில், இறந்த காட்டு முயலை தொங்கவிட்டபடி, ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு வந்தார்.
எம்.எல்.ஏ., பசனகவுடா துர்விஹாலின் தம்பிகளான சித்தன் கவுடா, துர்கேஷ் ஆகியோரும் உடனிருந்தனர். அவர்கள் கையில் கத்தி வைத்திருந்தனர்.
இந்த முயலை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வன விலங்கை கொலை செய்ததாக, எம்.எல்.ஏ., மகன் சதீஷ் கவுடா, சித்தன் கவுடா, துர்கேஷ் உட்பட சிலர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ராய்ச்சூர் போலீஸ் எஸ்.பி., புட்டமதாயா கூறுகையில், “இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஊர்வலத்தின் போது உடனிருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
எம்.எல்.ஏ., கூறுகையில், “இது பண்டைய கால பழக்கம். முயல் வேட்டை பற்றி எனக்கு தெரியாது. என் மகன், சகோதரர்கள் யாரும் முயலை வேட்டையாடவில்லை. அவர்கள் ஊர்வலத்தின் போது மட்டும் அழைத்து செல்லப்பட்டனர்,” என்றார்.
ராய்ச்சூர் மாவட்ட பா.ஜ., தலைவர் வீரண கவுடா லெக்கிஹாலா கூறுகையில், “எம்.எல்.ஏ.,வின் மகன் மீது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம்; அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் என பாரபட்சம் காட்ட கூடாது,” என்றார்.

