செயின் பறிப்பில் பயங்கர சம்பவம் இழுத்து செல்லப்பட்ட பெண் பலி
செயின் பறிப்பில் பயங்கர சம்பவம் இழுத்து செல்லப்பட்ட பெண் பலி
ADDED : ஆக 20, 2026 11:50 PM

காடுகோடி: பெங்களூரில் செயின் பறிப்பு கொள்ளையர்களால், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோலாரின் முல்பாகல் தாலுகா, திருமானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராதம்மா, 35. பெங்களூரின் காடுகோடி குண்டலஹள்ளியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த 15ம் தேதி, திருமானஹள்ளி சென்று விட்டு காடுகோடிக்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அந்த வழியாக பைக்கில் வந்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருவர், ராதம்மா கழுத்தில் அணிந்திருந்த, 60 கிராம் எடையுள்ள தாலி செயினை பறிக்க முயன்றனர்.
தாலி செயினை காப்பாற்ற கொள்ளையர்களுடன், அந்த பெண் போராடினார். நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை, 30 மீட்டர் துாரத்திற்கு கொள்ளையர்கள் பைக்குடன் இழுத்து சென்று, தாலி செயினை பறித்து தப்பினர்.
கழுத்து, உடலில் பல இடங்களில் காயம் அடைந்த ராதம்மா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரை கொன்ற கொள்ளையர்கள் இருவரை, போலீசார் தேடுகின்றனர்.
