/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சங்கு, சிப்பிகள் அருங்காட்சியகத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
/
சங்கு, சிப்பிகள் அருங்காட்சியகத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
சங்கு, சிப்பிகள் அருங்காட்சியகத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
சங்கு, சிப்பிகள் அருங்காட்சியகத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
ADDED : பிப் 09, 2026 05:02 AM

- நமது நிருபர் -:
விளையாட்டாக சங்குகள், சிப்பிகள் சேகரித்தது, ஒருவரை கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்த்தி உள்ளது.
மைசூரில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் பார்வையிடும் இடங்களில் ஒன்று, ஜாக்கி குவார்ட்டர்ஸ் அருகில் உள்ள சங்கு, சிப்பி அருங்காட்சியகம். சாமுண்டி மலை அடிவாரத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன், ராதா மல்லப்பா, என்பவரால் துவங்கப்பட்டது.
சங்கு நுழைவாயில் இதன் நுழைவாயிலே பிரமாண்டமாக இருக்கும். இந்த பகுதியில் மெகாசைஸ் சிப்பிகள், ஆமை பொம்மை, கடல் கன்னிகள், நத்தைகள் போன்று வடிவமைத்து உள்ளனர். இரு கடல் கன்னிகள் போன்று சிற்பம் அமைத்து, அதன் இடையே பெரிய சங்கு வடிவமைத்து உள்ளனர். இதனுள் நுழைந்து தான் அருங்காட்சியகத்திற்குள் செல்ல முடியும். உள்ளே நுழையும் போதும், நுழைந்த பின்னும் ஏற்படும் பரவசத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
டிக்கெட் வாங்கிய பின், கலை படைப்புகள் அமைந்துள்ள பகுதிக்குள் நுழையும் போது, 'லாபிங் புத்தா' என்ற சிரிக்கும் புத்தர் உங்களை வரவேற்பார். அதன் அருகில் சுவரில் பொருத்தப்பட்டு உள்ள ஆமை ஓட்டின் மீது சிறு மீன் தொட்டி உள்ளது. அதுபோன்று, பெரிய பெரிய மீன் பொம்மையின் வயிற்று பகுதியில் சிறிய மீன் தொட்டிகள் அமைந்துள்ளன. இது தவிர, சிறிய கலை படைப்புகள் அனைத்தும் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் நுாற்றுக்கணக்கான பென்குயின், நீர் நாய், விதவிதமான பூச்செடிகள், நிலக் கடலை ஓடு, வெங்காய தோல் ஆகிய பொருட்கள் மூலமும் பூச்செடிகள் வடிவமைத்துள்ளார்.
கின்னஸ் விநாயகர் இது தவிர, 5 அடி உயரத்தில் பல விளக்குகள் கொண்ட குத்து விளக்கு, இதன் அருகில் 22 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து உள்ளார். இது கடல் சிப்பிகள் மூலம் செய்யப்பட்ட உலகிலேயே பெரிய விநாயகர் சிலையாகும். இந்த கலைப்படைப்புக்காக அவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
இந்த சிலைகளை பார்த்த பின், சங்கு, சிப்பிகள் கொண்ட கடை உள்ளது. கடையில் நமக்கு வேண்டியதை வாங்கிய பின், ஞாபகர்த்தமாக 'செல்பி' பாயின்டில் போட்டோ எடுத்து கொண்டு செல்லலாம்.
கர்நாடகத்துக்கு பெருமை சேர்த்த இந்த மியூசியத்துக்கு உரிமையாளர் மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் ஹுல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராதா மல்லப்பா, 56. சிறு வயதில் தனது தாயாருடன் துணி துவைக்க ஆற்றுக்கு செல்வார். அப்போது கரையில் இருக்கும் சிப்பி மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சேகரித்தவைகளை கலை படைப்புகளாக உருவாக்கும் பழக்கத்தை வளர்த்து கொண்டார்.
கடந்த 40 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அரிய சங்கு, சிப்பிகளை சேகரித்து, கலைப்படைப்பு உருவாக்கி உள்ளார். இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி 30 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரை செலவழித்து, உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த சிப்பிகள், சங்குகளை வைத்து வீட்டிலேயே அருங்காட்சியகம் அமைத்திருந்தார். அதன்பின், 2017ல் ஜாக்கி குவார்ட்டர்ஸ் அருகில் சங்கு, சிப்பி அருங்காட்சியகம் அமைத்தார். கிருஷ்ண லீலை, தசாவதார சிலைகள், தாஜ்மஹால், செயின்ட் பிலோமினா தேவாலயம் உட்பட நுாற்றுக்கணக்கான கலைப்படைப்புகளை காணலாம்.
ராதா மல்லப்பா கூறியதாவது:
கிராமத்தில் பிறந்த நான், எனது தாயாருடன் ஆற்றங்கரைக்கு செல்லும் போது, அங்கிருந்த சிறிய சிற்பிகள், சங்குகளை எடுத்து வருவேன். ஒரு முறை தமிழகம் கன்னியாகுமரி சென்ற போது, அங்கு சிறிய பையில் இந்த சிற்பிகள், சங்குகள் விற்று கொண்டிருந்தனர். அதனை வாங்கி வந்து வீட்டிலேயே கலை படைப்புகள் செய்ய துவங்கினேன்.
வரவேற்பு நான் வடிவமைத்த கலை படைப்புகளை காட்சியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. ஆனால் வீட்டில் தேங்கியிருந்த இவைகளை, மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக, வீட்டிலேயே அருங்காட்சியம் அமைத்தேன். இது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பின், சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைத்தேன். சுற்றுலா வரும் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணியர், இங்கு வந்து பார்த்து, 'செல்பி' எடுத்து கொண்டு செல்கின்றனர்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த அருங்காட்சியகம், உலகில் சங்கு, சிப்பிகள் கொண்ட ஒரே அருங்காட்சியகம் இது தான். 40 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலன். இங்கு 360க்கும் மேற்பட்ட கலை படைப்புகள் உள்ளன.
உலக சாதனை படைத்த இங்குள்ள விநாயகர் சிலையை செய்து முடிக்க, எனக்கு ஆறரை ஆண்டுகள் ஆனது. அதுபோன்று, மைசூரு பிலோமினா தேவாலயம் செய்து முடிக்க, ஏழு ஆண்டுகளானது. இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு இதுபோன்று செய்து பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. வேக வேகமாக நடந்து முடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு பார்வைக்கு மட்டுமின்றி, சிறிய கலை படைப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
படம்: ராதா மல்லப்பா
9_Article_0001, 9_Article_0002, 9_Article_0003
பார்வையாளர்களை கவரும் விநாயகர், செயின்ட் பிலோமினா தேவாலயம், லாபிங் புத்தா.

