/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவியில் மகளிர் சுய உதவி குழு கண்காட்சி
/
பெலகாவியில் மகளிர் சுய உதவி குழு கண்காட்சி
ADDED : டிச 15, 2025 04:31 AM

- நமது நிருபர் -:
பெ லகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது, பல கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. பரத நாட்டியம், ஓவிய கண்காட்சி போன்றவை நடக்கின்றன. இதில், ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பில் செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி நடக்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க சர்தார் மைதானத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதை திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் துறை ஏற்பாடு செய்து உள்ளது. இந்நிகழ்வு படைப்பாற்றல், கலாசாரம், பெண்கள் முன்னேற்றம் போன்றவைக்கு கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.
பல மாவட்டங்கள் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று உள்ளனர்.
இங்கு வண்ணமயமான பைகள், கூடைகள், துணிகள், பூ ஜாடிகள், வீட்டு உபகரணங்கள், பழத்தால் தயாரிக்கப்பட்ட பானங்கள், சர்க்கரை பொருட்கள், நகை, பணப்பை, மேஜை விரிப்பு, ஊறுகாய், தட்டு, இனிப்பு வகை, சேலை, கைவினை பொருட்கள், துணி பைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இதில், குடகின் பிரபலமான, 'நான் ஆல்கஹாலிக் ஒயின்'களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதே போல, மற்ற கைவினை பொருட்களையும், அவை செய்யப்பட்ட விதம் குறித்தும் எடுத்துக்கூறுவதால் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அனுமதி இலவசம் இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கிலானோர் வருகை தருகின்றனர். இதில், பெண்களே அதிகம் என சொல்லலாம். வீட்டு உபயோக பொருட்கள் நியாயமான விலையில், நல்ல தரத்தில் விற்கப்படுவதால், ஆர்வமாக வருகின்றனர். மேலும், சுய உதவிக்குழுவில் இருக்கும் பெண்களிடம் கலந்துரையாடி மகிழ்கின்றனர்.
இந்த கண்காட்சி காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடக்கும். அனுமதி இலவசம். மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். உணவுக்காக தனி அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

