ADDED : செப் 06, 2026 11:22 PM

கொப்பால்: கொப்பால் மாவட்டத்தின், கவளி கிராமத்தில் வசிப்பவர் ஈரண்ணா ஹொன்னுஞ்சி, 24. இவர் எந்த வேலைக்கும் செல்லாமல், ஊரை சுற்றியதால் பெற்றோர் கண்டித்தனர். வயலுக்கு சென்று கூலி வேலை செய்யும்படி கூறினர். வேலைக்கு செல்வதில் இருந்து தப்பிக்க, ஈரண்ணா ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்தார்.
தன் மொபைல் போனில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், போலியான புலியின் படத்தை உருவாக்கினார்.
இந்த புலி கிராமத்தின் மலையில் அமர்ந்திருப்பதை போல, வீடியோ உருவாக்கி பெற்றோரிடம் காண்பித்தார். இதை உண்மை என, நம்பிய பெற்றோர் கலக்கமடைந்தனர். வேலைக்கு செல்லும்படி, மகனிடம் கூறுவதை நிறுத்தினர்.
இதை பார்த்த கவளி கிராமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினர், பீதி அடைந்தனர். வனத்துறைக்கு வீடியோவை அனுப்பி, புலியை பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
வனத்துறையினருக்கு, சந்தேகம் எழுந்தது. ஏ.ஐ., படம் என்பது தெரிந்தது. ஈரண்ணாவிடம் விசாரித்த போது, வயலுக்கு செல்வதில் இருந்து தப்பிக்க, இது போல் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
