ADDED : மார் 14, 2026 06:36 AM

சாம்ராஜ்நகர்: நண்பருடன் பார்ட்டிக்கு சென்ற இளைஞர், கொலையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகா, மூகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி, 23. இவர் பெங்களூரு, நஞ்சன்கூடு உட்பட பல இடங்களில், சிறு சிறு கூலி வேலை, செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டுக்கு வந்த இவர், ஓய்வில் இருந்தார்.
அப்போது, வீட்டுக்கு வந்த நண்பர் அஜய், பார்ட்டிக்கு வரும்படி அழைத்தார். நஞ்சுண்டசாமி வர மறுத்தும், பலவந்தமாக பைக்கில் அமர்த்தி அவரை அஜய் அழைத்து சென்றார். இதன்பின் நஞ்சுண்டசாமி வீடு திரும்பவில்லை.
அவர் வருவார் என, குடும்பத்தினர் காத்திருந்தனர். இந்நிலையில், கிராம சாலை ஒன்றில், நஞ்சுண்டசாமி கழுத்து அறுபட்டு கொலையாகி கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த குண்டுலுபேட் போலீசார், உடலை மீட்டனர்.
நஞ்சுண்டசாமியின் சகோதர் ராஜு அளித்த புகாரின்படி விசாரணையை துவக்கினர். நஞ்சுண்டசாமியை அழைத்து சென்ற அஜய் தலைமறைவாக உள்ளார்.
பார்ட்டியில் என்ன நடந்தது, இருவர் மட்டுமே பார்ட்டியில் இருந்தனரா, வேறு யாராவது இருந்தார்களா, போதையில் கொலை நடந்ததா என்பது மர்மமாக உள்ளது. அஜயை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கண்டுபிடித்த பின்னரே, நடந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.
இந்த சம்பவத்தால், கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
