/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாலிபர் பலியால் உஷார் பேனர்கள் அகற்றம் தீவிரம்
/
வாலிபர் பலியால் உஷார் பேனர்கள் அகற்றம் தீவிரம்
ADDED : நவ 24, 2025 03:36 AM

நெலமங்களா: சாலையின் நடுவில் வைத்திருந்த பிளக்ஸ் விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தால் விழித்து கொண்ட நகராட்சியினர், அனைத்து பிளக்ஸ், பேனர்களையும் அகற்றி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களாவை சேர்ந்தவர் தேஜஸ் கவுடா, 27. ஜெர்மனியில் எம்.எஸ்சி., படித்து வந்த இவர், தனது நண்பர் திருமணத்துக்காக கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 17ம் தேதி நெலமங்களா நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பைக்கில் சென்றார். அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ், அவர் மீது விழுந்தது.
நிலை தடுமாறியவர், பைக்குடன் கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நெலமங்களா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.
இதனால் கோபமடைந்த மக்கள், நெலமங்களா நகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து அப்பகுதியின் முக்கிய சாலைகளின் நடுவில் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

