ADDED : மார் 26, 2024 12:16 PM

புதுடில்லி : 'பார்தி ஏர்டெல்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'பார்தி ஹெக்சாகாம்' ஏப்ரல் 3ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதையடுத்து, 2025ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடுக்கு வரும் முதல் நிறுவனமாகிறது, பார்தி ஹெக்சாகாம்.
இந்த பங்கு வெளியீட்டின்போது முழுக்க முழுக்க பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. கிட்டத்தட்ட 7.50 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அதன் வாயிலாக நிதி திரட்டப்பட உள்ளது.
பார்தி ஹெக்சாகாம் நிறுவனம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில், தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த செப்டம்பர் 2023 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2.90 கோடியாகும். கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 5,420 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 281 கோடி ரூபாய்.
இந்நிறுவனத்தின், 70 சதவீத பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனம் வைத்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான டி.சி.ஐ.எல்., மீதமுள்ள 30 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 15 கோடி பங்குகளில், 50 சதவீதம் அதாவது 7.5 கோடி பங்குகளை, டி.சி.ஐ.எல்., விற்க உள்ளது.

