செயற்கை கோள் இணைய சேவை வழங்க தயார் நிலையில் 'பார்தி'
செயற்கை கோள் இணைய சேவை வழங்க தயார் நிலையில் 'பார்தி'
ADDED : ஆக 14, 2024 12:11 AM

புதுடில்லி:''அதிவேக இணைய சேவை வழங்கும் 'ஒன்வெப்' செயற்கைக்கோள் சேவை தயார் நிலையில் உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், சேவை துவங்கப்படும்'' என, பார்தி குழுமத்தின் தலைவர், சுனில் பார்தி மிட்டல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து சுனில் மிட்டல் கூறியதாவது:
'ஒன்வெப்' நிறுவனத்தின் இரண்டு செயற்கைக்கோள் நெட்வொர்க் போர்ட்டல்களில் ஒன்று, தென்னிந்தியாவிலும், மற்றொன்று வட இந்தியாவிலும் நிறுவப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
மேலும், இமயமலை, பாலைவனத்தில், முப்படைகள் மற்றும் அரசின் பிற அமைப்புகளுக்கு ஆதாரத்தை நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகளை நடத்தி உள்ளது.
தற்போது செயற்கைக்கோள்கள் இந்தியாவை அனைத்து நேரத்திலும், சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
வணிக ரீதியாக, செயற்கைகோள் இணைய சேவையை துவங்க, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
தொலைதுாரங்களில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கு, இது மிகவும் தேவைப்படுவதால், இதற்கான ஒப்புதல் நடைமுறையை விரைவுப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே, தொலைத் தொடர்பு அமைச்சகம், செயற்கைக்கோள் இணைய சேவை தொடர்பாக, 'டிராய்' அமைப்புடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
'டிராய்' அமைப்பின் முடிவு வெளியான உடன், எங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும், இடைக்கால அனுமதி வழங்குமாறு, தொலைதொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

