ADDED : மார் 26, 2024 12:11 PM
சென்னை : தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பயன்பெற, சென்னையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி மையம் அமைக்க, வழிகாட்டி நிறுவனம் முடிவு செய்தது.
இதை, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு முன் துவக்க திட்டமிட்ட நிலையில், மாநாடு முடிந்தும் அமைக்கப்படாமல் உள்ளது.
தமிழக அரசின் தொழில் துறை உயரதிகாரிகள், 2022, 2023ல் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனை
அங்கு, உலகின் பல நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் பங்கேற்று, எதிர்காலத்தில் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கு ஏற்ப எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நாடு முழுதும் அனைத்து தொழில் நிறுவனங்களும் மேம்பட்ட உற்பத்தியை நோக்கிய வளர்ச்சியை விரிவுபடுத்தி வருகின்றன.
எனவே, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், உலகளாவிய உற்பத்தி சமூகத்தை தமிழகத்திற்கு ஈர்த்திட, சென்னையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி மையம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, 2023 துவக்கத்தில் வெளியானது.
மேம்பட்ட உற்பத்தி மையம், தொழில் நிறுவனங்களின் நிலையான வளர்ச்சிக்கு தேவைப்படும் சூழலை உருவாக்குவதுடன், உலகளாவிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.
புதிய தொழில்நுட்பங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதுதொடர்பாக, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களும் ஆலோசனை வழங்கும். அதற்கு ஏற்ப பாட திட்டங்கள் உருவாக்கி, மாணவர்கள் படித்து முடித்தும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிகளுக்கும் மேம்பட்ட மையம் உதவும்.
பணிகள் துவக்கம்
சென்னையில் இந்தாண்டு ஜன., 7, 8ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக அமைக்க திட்டமிட்ட மேம்பட்ட உற்பத்தி மையம், மாநாடு முடிந்து, இரு மாதங்களாகியும் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேம்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக, பல நாட்டு பிரநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது; இடம் அடையாளம் காணப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன; விரைவில் மையம் செயல்பாட்டிற்கு வரும்' என்றார்.

