ADDED : மார் 24, 2024 12:33 AM

புதுடில்லி:இந்தியாவும் அமெரிக்காவும், உலக வர்த்தக அமைப்பில், தங்களுக்கிடையே நீடித்து வந்த ஏழு பிரச்னைகளுக்கும் வெற்றிகரமாக தீர்வுகண்டுள்ளதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக, உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு அமைப்புக்கு இரு நாடுகளும் கடிதம் அனுப்பியுள்ளன.
அமெரிக்காவிலிருந்து கோழி, குறிப்பாக கோழி கால்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்திருந்ததை எதிர்த்து, அமெரிக்கா கடந்த 2012ம் ஆண்டு, உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்திருந்தது.
இதுதொடர்பாக விசாரித்த வர்த்தக அமைப்பு, இந்தியாவின் செயல்பாடுகள் உலக வர்த்தக விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. இந்த முடிவை இந்தியா உரிய நேரத்தில் செயல்படுத்தாததால், அமெரிக்கா இழப்பீடு கோரியது.
இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில், புதுடில்லியில் நடந்த ஜி - - 20 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான இருதரப்பு சந்திப்புக்குப் பின், இந்த வழக்கின் தீர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தீர்வின் ஒரு பகுதியாக, சில அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 5 முதல் 10 சதவீதமாகக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டது.
இந்த வரி குறைப்பு, கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து பிரச்னைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வு கண்டுள்ளதாக, தற்போது இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பில் தெரிவித்துள்ளன.

