'மாநில பட்ஜெட்டு குறித்தும் கேள்வி கேட்க வேண்டும்'
'மாநில பட்ஜெட்டு குறித்தும் கேள்வி கேட்க வேண்டும்'
ADDED : ஆக 08, 2024 10:45 PM

சென்னை:“மாநில பட்ஜெட்டுகள் குறித்தும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்” என, சர்வதேச நிதியத்தின் செயல் இயக்குனரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சர்வதேச நிதியத்தின் செயல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் எழுதிய, 'இந்தியா@100 விக் ஷித் பாரத் - 2047' நுால் வெளியிடப்பட்டது.
நுாலை, சி.ஐ.ஐ., சர்வதேச கவுன்சில் பிரிவு தலைவர் தினேஷ் வெளியிட, சி.ஐ.ஐ., தமிழக பிரிவு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர் பெற்றுக் கொண்டார்.
பின், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியதாவது:
மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வது போல், மாநில அரசுகளும் பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றன. மக்கள் மத்திய பட்ஜெட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மாநில பட்ஜெட்டிற்கும் தர வேண்டும்.
நிதி ஒதுக்கீடு, வேலை உருவாக்கம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகள் கேட்க வேண்டும். அப்போதுதான், மாநில அரசுகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
இவ்வாறு கூறினார்.