ADDED : ஏப் 25, 2024 02:07 AM

புதுடில்லி:எல்.ஐ.சி., தனது பிராண்டு பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் தவறான வகையில் மோசடி விளம்பரங்கள் செய்யப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி., தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
எல்.ஐ.சி., பிராண்டு பெயர், லோகோ மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் படங்களை தவறாக பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் சில தனிநபர்களும், நிறுவனங்களும் மோசடி விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதுபோன்ற ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, பொதுமக்களையும், வாடிக்கையாளர்களையும் எல்.ஐ.சி., கேட்டுக்கொள்கிறது. மேலும், விளம்பரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.
இதுபோன்ற மோசடி விளம்பரங்களில் ஈடுபடுபவர்களின் யு.ஆர்.எல்., எனப்படும் இணையதள முகவரி குறித்து, பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கீகாரம் இல்லாமல் எங்கள் பிராண்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

