ADDED : ஏப் 11, 2024 09:39 PM

புதுடில்லி: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'டாம்சன் டெக்னாலஜிஸ்', அதன் பெருமளவு தயாரிப்பு செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரித்தேஷ் கோயங்கா கூறியதாவது: தற்போது எங்கள் நிறுவனம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்தின் முழு செயல்பாடுகளையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே, எங்களின் நீண்ட கால நோக்கமாகும்.
எங்கள் தயாரிப்புகளை சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்தால், அமெரிக்கா அதற்கு 25 சதவீதம் வரி விதிக்கிறது. அதே பொருளை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்தால், 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
இதையடுத்து, முதற்கட்டமாக 'ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ்கள்' தவிர, மற்ற அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களின் தயாரிப்பையும் இந்தியாவில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இத்துறையில் இயங்கும் சில நிறுவனங்கள், தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிளிங் மட்டுமே செய்வர். ஆனால் நாங்கள், உதிரி பாகங்களையே இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக அகமதாபாத்தில் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிப்பு ஆலை ஒன்றை அமைக்க உள்ளோம். மேலும் 100 கோடி ரூபாய், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

