ADDED : மே 15, 2024 12:38 AM

புதுடில்லி:சீன இறக்குமதி பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகளவு வரிகளை விதித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கம்ப்யூட்டர் சிப்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீது கடுமையாக வரிகளை உயர்த்தி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
விலை உயர்வு
இந்த புதிய வரி விதிப்புகளால், உருக்கு, அலுமினியம், செமிகண்டக்டர், பேட்டரிகள், முக்கிய தாதுக்கள், சோலார் மின் கலங்கள் மற்றும் கிரேன்கள் உள்ளிட்ட சீன இறக்குமதிப் பொருட்களின் மீது இந்திய ரூபாய் மதிப்பில் 1.49 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்க தரவுகளின் படி, கடந்த 2023ல், சீனாவில் இருந்து அமெரிக்கா 35.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
மேலும், சீனாவுக்கு, 12.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில், பல ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக இடைவெளி தற்போது அமெரிக்காவில் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்புகளினால், மின்சார வாகனங்களின் விலை, 25 முதல் 100 சதவீதம் வரையிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் பிற பேட்டரி பாகங்கள் மீது 7.50 முதல் 25 சதவீதம் வரையும் விலை உயர்த்தப்படும்.
சோலார் பேனல்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மின் கலங்கள், 25 முதல் 50 சதவீதம் வரையிலும், சில முக்கிய கனிம தாதுக்கள், 25 சதவீதம் வரையிலும் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பொருளாதார பாதுகாப்பு
கிரேன்களுக்கு 25 சதவீதம், சிரிஞ்சுகள் மற்றும் ஊசிகள் விலையும் 50 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும், மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சில தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் விலையிலும், 25 சதவீத உயர்வு இருக்கும்.
இவைகள் மட்டுமின்றி, வருகிற 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் செமிகண்டக்டர் மீது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். அவை தற்போதுள்ளதைவிட இரட்டிப்பாக்கப்படும் என தெரிகிறது.
இவ்வரி விதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ள சீனாவின் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
