விண்வெளி 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு உதவ 'வானம் ஸ்பேஸ் டெக் ஆக்சிலரேட்டர்'
விண்வெளி 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு உதவ 'வானம் ஸ்பேஸ் டெக் ஆக்சிலரேட்டர்'
ADDED : ஆக 02, 2024 12:26 AM

சென்னை:விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதற்காக, 'வானம் ஸ்பேஸ் டெக் ஆக்சிலரேட்டர்' நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனத்தை, தொழில் துறை அமைச்சர் ராஜா, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
துவக்கம்
வானம் ஸ்பேஸ் டெக் நிறுவனத்தை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வழிகாட்டுதலின் கீழ், தொழில்முனை வோர்கள் ஹரிஹரன் வேதமூர்த்தி, சமீர் பரத் ராம் ஆகியோர் இணைந்து துவக்கியுள்ளனர்.
துவக்க விழாவில், அமைச்சர் ராஜா பேசியதாவது:
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளி துறை மீதான ஆர்வத்தை உருவாக்க வேண்டும். நம் நாடு, விண்வெளி துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
இதை சரியான முறையில் சிறுவர்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். விண்வெளி துறையை சிறுவர்கள் தெரிந்து கொள்ள, பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, வானம் ஸ்பேஸ் டெக் இணை நிறுவனர் ஹரிஹரன் வேதமூர்த்தி கூறுகையில், ''விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் கண்டுபிடிப்பை விரைவாக சந்தைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை, வானம் முன்னெடுக்கும்,'' என்றார்.
இதுகுறித்து, மற்றொரு இணை நிறுவனர் சமீர் பரத் ராம் கூறியதாவது:
விண்வெளி துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 189 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. மற்ற துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விட, விண்வெளி துறையில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு அதிக சவால்கள் உள்ளன.
உதவி
பல நிறுவனங்களுக்கு, விண்வெளி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து தெரியவில்லை. எனவே, அந்நிறுவனங்களுக்கு முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்கி, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, வானம் ஸ்பேஸ் டெக் துவக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.