ADDED : செப் 16, 2024 01:38 AM

புதுடில்லி:வாகன மாசு அளவீட்டுக்கான, 'பாரத் ஸ்டேஜ்' எனப்படும் பி.எஸ்., தரநிலைகள் அறிமுகமாவதற்கு முன், சந்தைக்கு வந்த வாகனங்களை தகர்க்க வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து செயலர் அனுராக் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
வாகன புகை உமிழ்வையும், அதனால் ஏற்படும் காற்று மாசையும் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 2000ம் ஆண்டு பி.எஸ்., நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அனுராக் ஜெயின் தெரிவித்ததாவது:
மாசு மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை கருத்தில் கொண்டு, பி.எஸ்., தரநிலைகள் அறிமுகமானதற்கு முன், சந்தைக்கு வந்த வாகனங்களை திரும்பப் பெற்று தகர்க்கலாம். குறிப்பாக, அதிக அளவிலான மாசை ஏற்படுத்தும் கனரக, வர்த்தக வாகனங்களை தகர்க்க வேண்டும்.
இந்த வாகனங்கள் அனைத்துமே, இதற்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 15 மடங்கு கூடுதல் மாசை ஏற்படுத்துகின்றன. மாசு காரணமாக, நம் நாட்டில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலையில், இவை இயக்கப்படுவது உகந்ததல்ல. அதுமட்டுமல்லாமல், இது போன்ற வாகனங்களின் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகமாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

