நுகர்வோரை தவறாக வழிநடத்துதல் திருந்திய 26 'இ-காமர்ஸ்' தளங்கள்
நுகர்வோரை தவறாக வழிநடத்துதல் திருந்திய 26 'இ-காமர்ஸ்' தளங்கள்
UPDATED : நவ 21, 2025 12:12 AM
ADDED : நவ 21, 2025 12:07 AM

புதுடில்லி: நாட்டின், 26 இ- காமர்ஸ் வணிக தளங்கள், நுகர்வோரை தவறாக வழிநடத்தும் 'டார்க் பேட்டர்ன்'களை முற்றிலும் களைந்து விட்டதாக அறிவித்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'டார்க் பேட்டர்ன்ஸ்' என்பது நுகர்வோரை ஏமாற்றும், கட்டாயப்படுத்தும் அல்லது அவர்களின் சொந்த நலனுக்கு எதிராக முடிவெடுக்க துாண்டும், இ - காமர்ஸ் தளங்களின் வடிவமைப்பு, தேர்வு நடைமுறை மற்றும் செயல்பாடுகளை குறிக்கிறது.
இந்நிலையில், செப்டோ, சொமாட்டோ, ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஜியோமார்ட் உள்ளிட்ட 26 இ - காமர்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசின் 'டார்க் பேட்டர்ன்' தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றியுள்ளதாக, தாங்களாகவே முன்வந்து கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 26 தளங்களும், சுய தணிக்கை அல்லது மூன்றாம் தரப்பு தணிக்கை வாயிலாக, டார்க் பேட்டர்ன்களை அடையாளம் கண்டு, ஆய்வு செய்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சந்தைகளில், நுகர்வோர் நலனை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் என தெரிவித்துள்ள அமைச்சகம், பிற தளங்களும் இதை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திஉள்ளது.
நுகர்வோரை தவறாக வழிநடத்தும் நடைமுறைகளை களைய மத்திய அரசு தொடர் நடவடிக்கை
கடந்த 2023 நவம்பரில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு, 13 டார்க் பேட்டர்ன்களை சுட்டிக்காட்டியது
இ - காமர்ஸ் தளங்கள் மூன்று மாதங்களில் கட்டாய சுய தணிக்கை மேற்கொள்ள கடந்த ஜூனில் அறிவுறுத்தல்

