ADDED : ஜூன் 26, 2026 06:42 AM

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக காப்பீட்டு திட்டங்கள் சந்தையில் வரத்தொடங்கி உள்ளன என்கிறார் ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராய். அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
எந்தெந்த நோய், பாதிப்புகளுக்கு அதிக எண்ணிக்கையில் கிளெய்ம் கோரப்படுகிறது?
புற்றுநோய்க்குத்தான் அதிக அளவு கிளெய்ம்கள் வழங்கப்படுகின்றன. அதனையடுத்து கர்ப்பப் பை கட்டிகள், கண் நோய்கள், எலும்பு பாதிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. லைப்ஸ்டைல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
காப்பீட்டுத்துறையில் முகவர் கமிஷனை குறைக்க வேண்டும் என்கிறார்களே?
மருத்துவக் காப்பீட்டில் முகவர்களுக்கு 15% கமிஷன் தரப்படுகிறது. வங்கிகள், நிறுவனங்கள் முகவர்களாக இருந்தால் 20% கமிஷன் உண்டு. என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முகவர்களுக்கான கமிஷனை குறைப்பது சரியல்ல.
மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீடு கிடைப்பது கடினமாக இருக்கிறதே?
அந்நிலை மாறுகிறது. நாங்களே 'ஸ்பெஷல் கேர் கோல்டு' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தோம். அதன்படி, 40 சதவீதத்திற்கு மேல் உடல் திறன் சவால் கொண்டவர்களுக்கு காப்பீடு உண்டு. இதில் ஆட்டிச நிலையாளர்கள், ஹெச்.ஐ.வி. நோயாளிகளுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு உண்டு. இதுவரை 965 பேர் பயனடைந்துள்ளனர்.
ரூ.1,606 கோடி கிளெய்ம்”
ஸ்டார் ஹெல்த் நிறுவனம், தமிழகத்தில் 2025-26 நிதியாண்டில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்ட ரூ.1606 கோடிக்கும் அதிகமான கிளெய்ம் தொகையை வழங்கியுள்ளது. தற்போது, 20 சதவீத கிளெய்ம்கள், ஏ.ஐ., வாயிலாக கையாளப்படுகின்றன. இது அடுத்த 2 ஆண்டுகளில் 50% ஆக உயர்த்தப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 'மருத்துவ காப்பீட்டுக்கான ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்யப்பட்டதை அடுத்து புதிய பாலிசிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது' என ஆனந்த் ராய் கூறியுள்ளார்.
