ADDED : பிப் 18, 2026 01:26 AM

கணினி உலகில் மட்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அல்ல, ஏ.ஐ., பாரம்பரிய சேலை வடிவமைப்பிலும் அது புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
டாடா குழும நிறுவனங்களின் 'டாடா ஏ.ஐ., சகி' திட்டத்தின் வழிகாட்டி முத்துலட்சுமி, நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கைவினை கலைஞர்களுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் யோசனைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
'காஞ்சிபுரம் சில்க் பார்க்' என்ற தனிப்பட்ட மென்பொருள் தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 2 முதல் 3 மாதங்கள் வரை எடுக்கும் தன் விருப்ப வடிவிலான சேலை தயாரிப்பின் காலத்தை குறைப்பதே இதன் நோக்கம். இந்த மென்பொருள் வடிவமைப்பு, வடிவம், நிறங்கள் போன்ற தகவல்களை உள்ளீடாக பெற்று, தறி நெசவாளர்களுக்கு எல்.இ.டி., விளக்குகள் வாயிலாக வழிகாட்டுகிறது.
பழமையான முறையில், வடிவமைப்பை நெசவாளர்கள் உருவாக்கும் போது ஏற்படும் பிழைகள், நேரம், மூலப்பொருட்கள் வீணாகும் சூழலை உருவாக்கும். புதிய ஏ.ஐ., தீர்வு காரணமாக, பிழைகள் கணிசமாக குறைகின்றன. இதன் வாயிலாக நேரமும், மூலப்பொருள் இழப்பும் தவிர்க்கப்படுகின்றன.
தற்போது 'காஞ்சிபுரம் சில்க் பார்க்' வளாகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தீர்வை, மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏ.ஐ., உதவியுடன் உருவாக்கப்படும் நுணுக்கமான, சிக்கலான வடிவமைப்புகளை கொண்ட சேலைகள், சாதாரண சேலைகளை விட அதிக விலைக்கு விற்பனையாகின்றன. இது கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏ.ஐ., இம்பாக்ட் மாநாட்டில், இம்மர்சன் திட்டம் வாயிலாக 2,000 கிராமப்புற கைவினை மகளிருக்கு வெற்றிகரமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது. பலர் கைபேசி வழிக் கற்றலில் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இது அடித்தட்டு நிலை டிஜிட்டல் தயார்நிலையை உறுதிப்படுத்துவதோடு, ஏ.ஐ., சார்ந்த கிராமப்புற தொழில் முனைவு திறனுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும்.

