அனில் அம்பானி மோசடிதாரர் பேங்க் ஆப் பரோடா அறிவிப்பு
அனில் அம்பானி மோசடிதாரர் பேங்க் ஆப் பரோடா அறிவிப்பு
ADDED : செப் 06, 2025 12:34 AM

புதுடில்லி:எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியாவை தொடர்ந்து மற்றொரு வங்கியான பேங்க் ஆப் பரோடா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கு மற்றும் அதன் முன்னாள் இயக்குநரும், தொழிலதிருபருமான அனில் அம்பானியை மோசடிதாரர் என வகைப்படுத்தி அறிவித்துள்ளது.
வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாதது, ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனை பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்தது என, தொழிலதிபர் அனில் அம்பானியின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அமலாக்கத்துறை, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பேங்க் ஆப் பரோடா 1,600 கோடி ரூபாய் மற்றும் 862.50 கோடி ரூபாய் என மொத்தம் 2,462.50 கோடி ரூபாயை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடனாக வழங்கி இருந்தது. இதில், 1,656.07 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
எனவே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் கணக்கு, அதன் இயக்குநர் அனில் அம்பானியை மோசடியாளர் என வகைப்படுத்த முடிவு செய்துள்ளோம். முன்னதாக, கடந்த, 2017 ஜூன் 5ல் கடன் கணக்கு, வராக்கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என பேங்க் ஆப் பரோடா எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்து இருந்தது.
ஆனால், குற்றச்சாட்டுகளை அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
பேங்க் ஆப் பரோடாவின் நடவடிக்கை, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம் தொடர்பானது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் துவங்கப்பட்ட 2006ம் ஆண்டில் இருந்து, கடந்த 2019ல் ராஜினாமா செய்யும் வரை நிர்வாகம் சாராத இயக்குநராக அனில் அம்பானி இருந்தார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம். சட்டரீதியான நிவாரணம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.