ADDED : ஜன 19, 2024 09:52 PM

புதுடில்லி:தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான 103 கோடி ரூபாய் மதிப்புடைய 11 திட்ட முன்மொழிவுகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 11 திட்டங்களில், ஒன்பது திட்டங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகவும், மற்ற இரு திட்டங்கள் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் உருவாக்கலுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துஉள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான பல்வேறு பிரிவுகளை, இந்த திட்டங்கள் உள்ளடக்கும்.
அதன்படி, இரண்டு புரோடெக் திட்டங்கள், இரண்டு மெடிடெக் திட்டங்கள், இரண்டு மொபைல்டெக், ஒரு பில்ட்டெக், இரண்டு ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஒரு நிலையான டெக்ஸ்டைல்ஸ் திட்டம் ஆகிய பிரிவுகளை இந்த திட்டங்கள் உள்ளடக்கியது.
தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புகளின் உள்நாட்டு வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசு மற்றும் தொழில்துறையினர் இடையே உள்ள கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.